Nov 20, 2012

” ஜப் தக் ஹைய் ஜான் “ - அனுபவங்கள்!



மூன்று வாரங்களுக்கு முன்பு ஷாருக்கானைப் பற்றின பதிவில்  இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்,

 ” ஷாருக்கான் படத்தை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரியும். அவர் பெரும்பாலும், இன்னொருவருக்கு நிச்சயமான பெண்ணைத்தான் காதலிப்பார். அல்லது அவரது காதலி முதலில் வேறு யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார். தன்னுடைய இயலாமையை எண்ணி வருந்துவார். நல்லவராகவே நடந்துக்கொள்வார். க்ளைமாக்ஸில் காதலியை கைப்பிடிப்பார். அதற்குள் நாலு டூயட் பாடியிருப்பார். பத்து பேர்கிட்ட அடி வாங்கியிருப்பார்....  “

இதில், பத்து பேர்கிட்ட அடிவாங்கியிருப்பார் என்பதற்கு பதிலாக, 107 வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தார் என்று மாற்றிக்கொண்டால், அதுதான் “ ஜப் தக் ஹய் ஜான்! “

படத்தைப்பற்றின சில துளிகள் :

* லண்டன் மாநகரில் பனிமழைப்பொழியும் ஒரு நன்னாளில் ஷாருக்கான், ஸ்லோமோஷனில் ஓடிவரும் காத்ரினாவைப் பார்க்கின்றார். வழக்கம்போலவே தலைக்கு மேல் பல்பு எரிகின்றது.

* ஷாருக்கான் ஒரு மல்டிபள் டேலண்ட்டட் பர்சனாக காண்பிக்கப்படுகின்றார். அதாவது, தெருக்களை சுத்தப்படுத்துகின்றார், மீன் விற்கின்றார், கார்களை க்ளீன் செய்கின்றார், எல்லாவற்றிற்கும் மேலாக, கையில் கிட்டார் வைத்துக்கொண்டு லண்டன் வீதிகளில் பாட்டு பாடி சம்பாதிக்கின்றார். லண்டனாக இருந்தாலும் ஹிந்தி பாடலைத்தான் பாடுகின்றார். ( இங்குதான் ஹீரோயினுக்கு ஹீரோ மீது சிறு கவனம் ஏற்படுகின்றது )

* ஹீரோயினுக்கு இன்னொருவருடன் நிச்சயம் ஏற்படுகின்றது. ஆனால் ஹீரோயினின் கண்களில் சந்தோஷம் இல்லை. அந்த விழாவினில் 150 பேர் இருந்தாலும் யாருமே அதனை கவனிக்கவில்லை, ஹீரோவைத்தவிர!
பார்ட்டி ஹாலின் ஒதுக்குப்புறத்தில் தனியாக 'தம்' அடித்துக்கொண்டிருக்கும் ஹீரோயினிடம் இதுபற்றி விசாரிக்கின்றார். அதற்கு ஹீரோயின் WTF என்று கடுப்பாகி, தான் சந்தோஷமாக இருப்பதாகவே கூறுகின்றார். ( இந்த இடத்தில் டைட்டானிக்கின் பாதிப்பு இருந்தால், அதற்கு ஹீரோவும் ஹீரோயினும் பொறுப்பல்ல )

* பிறிதொரு நன்னாளில், தனக்கு பஞ்சாபி பாடல்களைக் கற்றுத்தரும்படி ஹீரோயின் ஹீரோவை அணுகுகின்றார். ஹீரோயினின் தந்தைக்கு ஐம்பதாவது பிறந்தநாளின்போது பஞ்சாபி பாடல்களைப்பாடி தனது தந்தையை மகிழ்விக்க வேண்டுமென்பது ஹீரோயினின் எண்ணம்.

* இருவரும் பழக ஆரம்பித்ததும், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து....... ஆடிப்பாடி இம்ப்ரஸ் ஆகி, காதலிக்கத்துவங்கி, பின்னர் பிரிந்து..... ஹீரோ இந்திய ராணுவத்தில் மேஜர் ஆகி, வெடிகுண்டுகளை செயல் இழக்க வைப்பதில் நிபுணராகி............... மீண்டும் லண்டன் வந்து, ஹீரோயினைப்பார்த்து............ மீண்டும் பிரிந்து இந்தியா வந்து, ஹீரோயினும் ஹீரோவைத்தேடி,  முதல் முறையாக இந்தியா வந்து........ க்ளைமாக்ஸில் எப்படி ஒன்னு சேர்ந்தார்கள் என்பதை 120 ரூபாய் கொடுத்து பார்க்க வைப்பதே
“ ஜப் தக் ஹை ஜான் “

* பட்ஜெட் இருப்பதால், படத்தில் இன்னொரு ஹீரோயினும் உண்டு!
  ( அனுஷ்கா சர்மா )

* வெளிநாட்டினரும், மேல் தட்டு மக்களும் ரசிக்க வேண்டும் என்பதற்காக ஹாலிவுட்டிற்கு நிகராக WTF, A** Hole , Bi**h......... போன்ற வசனங்களும் அசால்ட்டாக இந்த படத்தில் உண்டு!

* அப்புறம்......... வாழ்வின் மிக முக்கிய முடிவு எடுக்கும்பொழுது, என்ன மாதிரியான முடிவெடுப்பது என்று குழம்பியிருக்கும்பொழுது, நமக்கு முன்பே அதுபோல குழம்பிய ஒருவர் தன்னுடைய அனுபவத்தைச் சொல்லுவார். உடனே நாமும் அவர் எடுத்த முடிவையே எடுத்துவிடுவோம். இது காலங்காலமாக இந்தி சினிமாக்களில் காணக்கூடிய விஷயம். அதுபோல இந்த படத்திலும் ஒரு காட்சி உண்டு.

* இதையெல்லாம் தாண்டி, எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் ஏ.ஆர்.ரகுமானின் இசையும், பாடல்களும்தான். " Saans mein tere " பாடல் ரிலீஸிற்கு முன்பே எனது ஃபேவரைட்... ஆரம்ப பாடலான " Challa ki labh da phire " பாடலும், படம் முழுவதும் பின்தொடரும்
அதன் பிண்ணனி இசையும் அருமையாக இருந்தது.

* குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய அடுத்தபாடல் "Ishq shava " பாடலும், அதன் இசை, நடனம், பாடலுக்கு முன்பாகவே ஐந்து நிமிடங்கள் காத்ரினா போடும் ரணகள ஆட்டம் தவறவிடக்கூடாதவை! தியேட்டரே அதிர்கின்றது....

* இசைக்கு அடுத்தபடிடாக, குறிப்பிடத்தக்க விஷயம், ஒளிப்பதிவு. இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவரான அனில் மேத்தாவின் ஒளிப்பதிவு அதகளம்.

* போகிறப்போக்கில் சில வசனங்கள், ரசிக்க வைக்கின்றன ( எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியிலும் சில வசனங்கள் ரசிக்கவைத்தன ) அனுஷ்கா தன்னுடைய பெயரை அகிரா என்று அறிமுகப்படுத்தும்பொழுது, “ நீ  ஜப்பானியா “ என்று ஷாருக் கலாய்ப்பார்.  விபத்து ஏற்பட்டு, ஓய்வு எடுத்துவரும் ஷாருக், காத்ரினாவை செக்ஸிற்கு அழைப்பார். காத்ரினாவோ,
“ டாக்டர் இதெல்லாம் கூடாதுன்னு “ சொல்லியிருக்கார் என்பார். அதற்கு ஷாருக்கான் கடுப்பாகி, ” அவர் நியூராலிஜிஸ்ட்தானே? செக்ஸாலிஜிஸ்ட்டா என்ன? “ என்பார். மேலும், ” அந்த டாக்டர் என்ன லெஸ்பியனா? “ என்பார்.
 ( டாக்டர் ஒரு பெண் )

* ஷாருக்கான், காத்ரினா, ரொமான்ஸ் பிரியர்களுக்கு நிச்சயம் இந்தப்படம் பிடிக்கும். என்ன ஒன்று... படத்தோட நீளம் கொஞ்சம் அதிகம். 47 வயதிலும் ஷாருக் தனது உடலை முறுக்கேற்றி இளைமையாக ஃபிட் -டாக வைத்துள்ளார்... அவர் உடம்பை பார்க்கும்போது, எனக்கே என்மீது சிறிது கடுப்பாக உள்ளது!

* நான்கைந்து இடங்களில், இடைவேளை வந்துவிடுமாறு காட்சிபடுத்தி, ஆனால் இடைவேளை கார்டு போடாமல் இழுத்தடித்தே இடைவேளை விடுகின்றார்கள்.

* மூன்று மணி நேரமும் பொறுமையாக,  ரசித்துதான் பார்த்தேன்....... மற்றவர்களுக்கு எப்படின்னு பார்த்துட்டு முடிவை சொல்லுங்க!

* எஸ்கேப் சினிமாஸில் " PLUSH " அரங்கினில் பார்த்தேன். ஏற்கனவே இந்த காம்ப்ளக்ஸில் பார்த்த,  மங்காத்தா, ஒஸ்தி, வழக்கு எண் 18/9  என எல்லா படங்களும் இந்த அரங்கினில்தான் பார்த்தேன். ( ஏதோ டெலிபதி ஒர்க்கவுட் ஆகுது )  இரவு 10.20 -க்கு ஆரம்பிக்கப்படவேண்டிய படம் 10:30-க்குதான் ஆரம்பித்தார்கள். 10 மணியிலிருந்து 30 நிமிடங்களாக விளம்பரங்களையே காண்பித்து கடுப்பேற்றினார்கள். 60 ரூபாய் காஃபி  ஒர்த்தே இல்லை. முன் பின் காஃபியை குடித்திருப்பார்களா என்றே தெரியவில்லை! பைக் பார்க்கிங் 50 ரூபாய்!

Nov 11, 2012

இரண்டு திரைப்படங்கள்...



இரண்டு திரைப்படங்கள்...

( விமர்சனம் அல்ல, எனது அனுபவங்கள் )

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் இரண்டு திரைப்படங்களை இன்று பார்த்தேன்.
( தொழில் நிமித்தமாக ஒரே நாளில் நான்கு படங்களைக் கூட பார்த்துள்ளேன். ஆனால் கமர்ஷியல் திரையரங்கிற்கு சென்று பார்ப்பது தனி அனுபவம்தானே? )

கடைசியாக, 2003-ம் ஆண்டு தீபாவளீயன்று, காலையில் ”ஆஞ்சனேயா “, மாலையில் “ திருமலை “ என இரண்டுத் திரைப்படங்களைப் பார்த்தேன். அதன்பிறகு அதுபோன்ற ரிஸ்க் எடுப்பதை தவிர்த்துவிட்டேன்.

பீட்சா:

காலையில் கமலா திரையரங்கில் “ பீட்சா “ பார்த்தேன். முதல் ஐந்து நிமிடங்களை தவறவிட்டுட்டேன்.... இருந்தாலும் அதன் பாதிப்பு எதுவும் தெரியவில்லை. பொதுவா படம் பார்க்கும் முன்பு அந்த படத்தைப் பற்றின விமர்சங்களை படிச்சிட்டுதான் பார்ப்பேன். ஒரு சில படங்களே விதிவிலக்கு! ( திரை விமர்சனத்திற்காக மட்டுமே பத்து பதினைந்து வலைப் பதிவர்களை ஃபாலோ செய்துக்கொண்டிருக்கின்றேன் )

திகில் படங்கள் மீது எனக்கு பெரிய ஈடுபாடே கிடையாது. அனைத்தும் ஒரே மாதிரியாக பழிவாங்கும் படமாகவே இருக்கும். ஒரே மாதிரி முக பாவனைகளைக் காட்டிக்கொண்டிருப்பார்கள்....

“ அந்த ரூமில் பேய் இருக்கு... அப்டியே பயந்து பார்த்துட்டே
போகணும் “-னு டைரக்டர் சொன்னதும், கதாபாத்திரங்களும் அதற்கேற்ப பயந்து பயந்து செல்வார்கள்!
ஈடுபாட்டுடன் பயந்துகொண்டே பார்த்த படம் ராம்கோபால் வர்மாவின்
“ பூத் “ -தான்! படம் பார்த்துவிட்டு, ஹாஸ்டல் அறையில் தனியாக படுக்க பயந்து, நண்பர்களுடன் சேர்ந்துதான் படுத்தேன். அதன்பிறகு ரசித்துபார்த்த திகில் படம் “ஈரம்”. பீட்சா-வை பொறுத்தமட்டில் இரு வேறு விமர்சனங்களை படித்தேன். தமிழில் நல்ல முயற்சி, அட்டகாசமான படம் என்றும், அடுத்ததாக கடைசி இருபது நிமிடங்கள் தான் மொத்த படத்தையும் தாங்கிப்பிடிக்கிறது. அதுவரை ஒன்றுமேயில்லை என்றும் இருவகையான விமர்சனங்களைப் படித்தேன்.

எனது கருத்து இதுதான்..... இதுவரை உலகத்தில் எடுக்கப்பட்ட எந்தபடமாக இருந்தாலும், க்ளைமாக்ஸை நோக்கியே பயணிக்கும். முடிவை எவ்வாறு கொண்டுசெல்வது என்பதில்தான் இயக்குனர்கள் மண்டையை குடைந்துக்கொண்டிருப்பார்கள். க்ளைமாக்ஸின் பத்து இருபது நிமிடங்களுக்காத்தான் நாம் முழுபடத்தையுமே பார்த்துக்கொண்டிருக்கின்றோம். சில படங்களை முடிவு தெரிந்தபின்னரும் கொடுத்த காசுக்காக பார்த்துத் தொலைப்போம்!

பீட்சாவைப் பொறுத்தவரை எனக்கு எந்த அலுப்புமே தட்டவில்லை. ஒரு கட்டத்திற்கு பின்னர், க்ளைமாக்ஸில் நிச்சயமாக வேறுமாதிரியான ட்விஸ்ட் இருக்குமென எதிர்பார்த்தேன்... அதுபோலவேதான் நடந்தது. சினிமா - டீம் வொர்க் என்பது அனைவரும் அறிந்ததே. ப்ரீ ப்ளான் ( Pre - Plan ) மிகவும் முக்கியம். அந்த வகையில் இந்தப்படம் 100% வெற்றியடைந்துள்ளது. சிற்பத்தைப்போல செதுக்கியுள்ளார்கள். இதுக்கும் மேலாக என்ன சொல்வதென்று தெரியவில்லை.

டெக்னிக்கலாக,

இந்த படம் ரெட் டிஜிட்டல் கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக டிஜிட்டல் கேமராக்களில் ஃபிலிமிற்கு இணையான தரம் கிடைக்காது. “ ரெட் “ கேமராவைப் பொறுத்தமட்டில் Outdoor -ஐ விட Indoor ரிஸல்ட் நன்றாக இருக்கும். இந்தப் படம் 90% Indoor -ரிலேயே நிகழ்வதால் ஒளிப்பதிவு அட்டகாசமாக அமைந்துள்ளது. அதற்க்காக மிகவும் மெனக்கெட்டுள்ளனர் என்பது படம் பார்க்கும்போது தெரிகின்றது. டெக்னிக்கல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

தியேட்டர் டிஸ்கி :

கமலா திரையரங்கம் புத்தம் பொலிவுடன் 2K டிஜிட்டல் புரொஜக்டரில் மிளிர்கின்றது. டிஜிட்டல் புரொஜக்டர்களைப் பொறுத்தவரையில் 2K தரத்தில் இருந்தால்தான் கலர் மற்றும் ப்ரைட்னஸ் ( color & Brightness ) பார்வையாளனுக்கு திருப்தியைத்தரும். “ சத்யம் “
“ எஸ்கேப் “ போன்ற திரையரங்குகளில் படம் பார்த்தவர்களுக்கு அந்த வித்தியாசம் தெரியும். அந்த வகையில் கமலாவில் இனிமேல் தைரியமாக படம் பார்க்கச் செல்லலாம்! ( “ ஃபிலிமிலிருந்து டிஜிட்டல் ” - தனிப் பதிவாக விரைவில் )

ஸ்கைஃபால் :

இதுவரை வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் படங்களிலேயே எனக்கு மிகவும் மொக்கையாகத் தோன்றிய படம் இதுதான். இதற்கு பதிலாக ”பீட்சா”-வை ஆங்கிலத்தில் மொழிமாற்றும் செய்து ஹாலிவுட்டில் ரிலீஸ் செய்திருக்கலாம் போல! இல்லைன்னா “ கேப்டன் “ அல்லது “ ஆக்‌ஷன் கிங் “ -ஐ நடிக்க வைத்திருந்தால் குறைந்தபட்சம்
Madam " M "-ஐயாவது காப்பாற்றியிருக்கலாம்...
படத்தைப் பற்றி வேறென்ன சொல்ல?

தியேட்டர் டிஸ்கி :

ஆங்கலப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்த திரையரங்குகளில்தான் நான் பார்ப்பேன். மிகவும் பிடித்திருந்தால் இன்னொரு முறை ஆங்கிலத்தில் சத்யம் அரங்கில் பார்ப்பேன்.( உண்மையான தரத்தைக் காண்பதற்காக ) அந்த வகையில் இந்தப் படம் தமிழில் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டரான “காசி”-யில் பார்த்தேன். காசியில் கடந்த முறை பார்த்த “ பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - பாகம் 4 “ -ன்போது மிக மோசமான அனுபவமே நேரிட்டது. டி.டி.எஸ் டிஸ்க் வேலை செய்யாததால் மோனோ ஒலியுடனே படமிட்டர்கள். ஒவ்வொரு முறை கார்பன் மாற்றும்பொழுதும், 30 -40 நொடிகள் இருட்டான பின்பே மாற்றினார்கள். ஒரு புரொஜக்டர் நீலமாகவும், இன்னொரு புரொஜக்டர் பச்சையாகவும் வண்ணம் தெரியும். கோடி ரூபாய் கொடுத்தாலும் இனி இந்த தியேட்டருக்கு வரக்கூடாது என முடிவெடுத்துவிட்டேன்.

அதன்பின்பு ” நண்பன் “ படத்தின்போது டிஜிட்டல் புரொஜக்ட்டருக்கு மாறிவிட்டனர் என்று தெரிந்தபின்னரே சென்றேன். அந்த நம்பிக்கையில்... நம்பி..... இந்தப்படத்திற்கும் சென்றுவிட்டேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது :-(

முதல் இரண்டு நிமிடங்களுக்கு சப்தமே வரவில்லை. அதன் பிறகு பயங்கர சப்தத்திடன் ஒலி கேட்டது. சிறிது நேரத்தில் அதுவும் நின்றுவிட்டது. கதாபாத்திரங்கள் பேசுவது கேட்காமல், சர்ரவுண்ட் ஒலி மட்டுமே பத்து நிமிடங்களுக்கு கேட்டது. ரொம்பவே கடுப்பாகி, வெளியே நின்றிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டேன். அவர் ஆபரேட்டருக்கு ஃபோன் செய்தார். ஆபரேட்டர் ஃபோனை எடுக்கவில்லை. மேனேஜரிடம் சென்று முறையிடுங்கள் என்று கூறிவிட்டார். கீழிறங்கி மேனேஜரிடம் சொல்லவே, உடனடியாக கேபினுக்கு ஓடினார். படம் நிறுத்தப்பட்டது. ஐந்து நிமிட பரிசோதனைக்குப் பின்னர், மீண்டும் டி.டி.எஸ் ஒலியுடன் முதலில் இருந்து படம் ஓட்டப்பட்டது. படம் முடிந்ததும் நானும் தலை தெறிக்க ஓடி வந்துட்டேன்....

திருட்டு டிவிடியில் படம் பார்ப்பது எனக்கு பிடிக்காது. இருந்தாலும் சொல்கின்றேன்... 130 ரூபாய் செலவு செய்து இதுபோன்ற திரையரங்குகளில் படம் பார்ப்பதைவிட 30 ரூபாய் திருட்டு டிவிடியில் 5.1 ஒலியுடம் படம் பார்ப்பது எவ்வளவோ மேல்!

Nov 2, 2012

எனக்குப் பிடித்த ஷாருக் கான்


ஷாருக்கான் படங்களைத் தொடர்ந்து பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும்.  பெரும்பாலும், இன்னொருவருக்கு நிச்சயமான பெண்ணைத்தான் காதலிப்பார். அல்லது அவரது காதலி முதலில் வேறு யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார். அதனை அறிந்த, தன்னுடைய இயலாமையை என்ணி வருந்துவார். நல்லவராகவே நடந்து கொள்வார். க்ளைமாக்ஸில் காதலியைக் கட்டிப்பிடிப்பார். அதற்குள் நாலு டூயட் பாடியிருப்பார். பத்து பேர்கிட்ட அடி வாங்கியிருப்பார்....

ரமணா படத்தில் ஒரு வசனம் வரும்,  “ சவுத் இண்டியண்ஸ் எல்லாரும் செண்டிமெண்டல் இடியட்ஸ்” என்று! உண்மையில் வட இந்தியர்கள் செண்டிமெண்ட்டிற்காக உயிரையே கொடுப்பார்கள் என்பது இந்திப் படங்களை பார்த்தாலே தெரியும்.  காதலில் உருகி, பெரியவர்களுக்கு மரியாதைக் கொடுத்து, உறவுகளை விட்டுக் கொடுக்காமல், வசனங்களைப் பேசி பேசியே நம்மை உருக வைப்பார்கள்....சரி.... இப்போ இது இல்லை மேட்டர். இன்னைக்கு ஷாருக்கானின் பிறந்தநாள். நான் ரசித்த ஷாருக்கானைக் குறித்த எனது பார்வைதான் இந்தப் பதிவின் நோக்கம்.அதற்காக ஷாருக்கான் பிறந்த கதை, கஷ்ட்டபட்டு படிச்ச கதை, சினிமா வாய்ப்புக்காக மும்பையில் அலைந்துதிரிந்த கதையெல்லாம் இங்கே கிடையாது. முழுக்க முழுக்க, நான் ரசித்த ஷாருக்கானின் படங்கள், பாடல்கள் பற்றி மட்டுமே சில துளிகள்...

 1980 மற்றும் 90-களில்  தூர்தர்ஷன் மட்டுமே நமக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு. சென்னை வாசிகளுக்கு டிடி 2 மெட்ரோ சேனலையும் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த நாட்களில் புரியுதோ இல்லையோ, தூர்தர்ஷனில் இந்தி படங்கள், பாடல்கள், நாடகங்கள் என எதையாவது பார்த்துக்கொண்டே இருப்போம். இவற்றுள் சித்ரஹார் மற்றும் ரங்கோலி மறக்கமுடியாதவை. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் ரங்கோலிக்காக ஏழு மணிக்கே தாயாராகியிருப்போம்.
 ( இப்போதெல்லாம் ஞாயிறு என்றாலே 12 மணிக்கு முன்பாக எழுவதில்லை )

ஒரு புதன்கிழமை மாலை நேரத்தில் சித்ரஹார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடலின்போதுதான் முதன் முதலாக ஷாருக்கானின் அறிமுகம் கிடைத்தது. கறுப்பு நிற உடையில் கண்களுக்கு கறுப்பு துணி கட்டிக்கொண்டு குதிரையில் வருவார். அந்தப் பாடல் மற்றும் பாடலின் இசை அட்டகாசமாக இருந்தது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த பாடல்களைக் காட்டிலும் அந்த பாடலில் ஏதோ ஒரு பரவச உணர்வு இருந்தது. எங்கள் ஊரில் பல வருடங்களுக்கு அந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது.  ( எனது ஊர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் என்றாலும், சிறு வயதில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூரிலும் வசித்துள்ளோம். ஆகையால் நிறைய இஸ்லாமிய நண்பர்களின் வீடுகளில் ஒலித்த இந்தி பாடல்களைக் கேட்டு வளரும் வாய்ப்பு அமைந்தது )

பரவசமூட்டிய அந்த பாடல் இடம் பெற்ற படம்
 “ பாஸிகர் “ என்ற படத்தில் அமைந்த  “ பாஸிகர்... ஓ.... பாஸிகர்...... “ என்ற பாடல்தான்....அதே படத்தில், இன்னொரு பாடலில் ஷாருக்கான் டிஸ்கோ க்ளப்பில் பாடும் பாடலும் கவனத்தை ஈர்த்தது
 “ ஹே காலே காலே ஆங்க்கேன்.... “ என்று துவங்கும் இந்த பாடலில் ஷாருக் கானின் நடனம் என்னை வெகுவாக கவர்ந்தது. மேலும் ஷாருக்கின் கண்களுக்கு மட்டுமே ஒளி அமைத்து, பார்ப்பதற்கு வித்தியாசமாக அமைந்திருந்தது. இதே படத்தில் இன்னொரு மெலடி பாடலான “ஹே மெரி ஹம் சஃப்ஃபர்....” என்ற பாடலும் இனிமையாக இருக்கும். ஷாருக்கின் அறிமுகபடமான  “ தீவானா “ படத்தில் இடம்பெற்ற, “ ஜானே ஜானா தீவானா...... “ என்ற பாடலும் மிகவும் பிரபலம்.


பாஸிகர் படத்தின் பாடல் இங்கே




அதற்கு அடுத்து,  “தர்” என்ற படத்தில், ” ஸாது.... தேரி நஸர்.... “ என்ற பாடலை, கைகளில் கிட்டாரை வைத்துக்கொண்டு மரத்துக்கு பின்னால் நின்று பாடிக்கொண்டிருப்பார். ஜுஹி சாவ்லா அவரை தேடிக் கொண்டிருப்பார்..... இதுவும் ஷாருக்கானை ரசிக்க காரணமாக அமைந்த பாடல். அதன்பிறகு   “ கரன் அர்ஜூன் “ என்ற படம் நினைவில் உள்ளது. ஆனால் பாடல்கள் எதுவும் நினைவில் இல்லை.1995-ம் ஆண்டு வெளிவந்த “ தில் வாலே துல் ஹல்னியா லே ஜாயங்கே ” படமும், பாடல்களும் இந்தியா முழுவதும் பிரபலமானது. அந்த படத்தின் எல்லா பாடல்களும் என்னை மிகவும் கவர்ந்தவை. ஆடியோ கேசட்டின், ஏ மற்றும் பி இரண்டு பகுதிகளிலும் அந்த படத்தின் பாடல்களை பதிவு செய்து கேட்டு கொண்டிருப்போம்....

1996-ம் ஆண்டின் பள்ளி விடுமுறையில், சென்னை வந்திருந்தபோதுதான்  “ ஈகா ” திரையரங்கில் ( 13 வயதில் ) தன்னந்தனியாக அந்தப் படத்தினை சென்று பார்த்தேன். அப்போதைய டிக்கெட் விலை ரூ.4.20/-  டிக்கெட் வாங்க கவுண்ட்டரில் நின்றுக்கொண்டிருந்தது முதல், படம் முடித்து வெளியே வந்தது வரை இன்றும் என் நினைவில் உள்ளது. அப்போது படம் வெளிவந்து 200 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. இருப்பினும் கிட்டத்தட்ட தியேட்டர் நிறைந்திருந்தது. பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், ரிப்பீட்டட் ஆடியன்ஸ்....!!! முதன் முதலாக புரியாத மொழியை, கதையுடன் ஒன்றி, பரவசமாக பார்க்க முடிந்தது....அதிலிருந்துதான் ஷாருக்கானை  மிகவும் ரசிக்கத் தொடங்கினேன்...

அதன்பின் வெளிவந்த  “ டிரிமூர்த்தி,  யெஸ் பாஸ், பர்தேஸ்” போன்ற படங்களிலும் பாடல்கள் அருமையாக இருக்கும். “ பர்தேஸ்”  படத்தில்  
“ மேரே மெஹ பூப்ஹா”  பாடல் மிகவும் பிரபலம்.

  “ தில் தோ பாகல் ஹை” - பாடல்கள் அட்டகாசமாக இருந்த இன்னொரு வெற்றிப்படம். யாஷ் சோப்ராவின் இயக்கத்தில், இளைமை துள்ளி விளையாடிய படம்.





 “ குச் குச் ஹோதா ஹை” - இந்தப் படத்தைப்பற்றியே பத்து பக்கங்களுக்கு மேல் எழுதலாம். படமும் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தன... அர்த்தம் புரியாதவர்கள் கூட
“ குச் குச் ஹோதா ஹே ”  என்ற இந்தப் படத்தின் பாடலை முணுமுணுப்பார்கள். தனிப்பட்ட முறையில் நான் இந்த படத்தின் அடிமை. இதுவரை 30 முறைகளுக்கும் மேலாக பார்த்திருப்பேன்.
இந்த படத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நான்கு காதாபாத்திரங்களில்,
நாமும் ஏதாவதொரு கேரக்டராக இருப்பதைப்போலவே உணர்வு ஏற்படும். இதுதான் இந்தப் படத்தின்  வெற்றிக்கு மிகப்பெரிய காரணம்.
( நான் செண்ட்டிமெண்டாக ஃபீல் பண்ணி பார்த்த படம். செண்ட்டிமெண்ட் இல்லையென்பவபர்கள், இந்தக் கருத்தில் மாறுபடலாம் )

“ தில் சே “ படத்தின் பாடல்களும் அதகளமாக இருக்கும். எங்கள் ஊர் முருகன் திரையரங்கில்,  ‘தைய்யா தைய்யா’ பாடலை மூன்று முறை ஒளிபரப்பினார்கள்.  பாடல்கள் ஹிட்டான அளவிற்கு படம் ஓடாதது சிறிது வருத்தமே!

குச் குச் ஹோதா ஹை - அட்டகாசமான மெலடி

தில் சே பாடல்




அதன் பின் வெளிவந்த, பாட்ஷா, மொஹபத்தின், ஜோஷ் போன்ற படங்களும் கவனம் ஈர்த்தன. பின்னர் வந்த “ அசோகா “ வரலாற்றுப்பிண்ணனியில் எடுக்கப்பட்டிருக்கும். பாடல்களும் நன்றாக இருந்தன. அதன் பின் வந்த “ கபி குஷி கபி கம் “ இன்னொரு செண்டிமெண்ட் படம்...இந்தியாவைக் காட்டிலும் மற்ற நாடுகளில்தான் சக்கைப் போடு போட்டது.   ”தேவதாஸ்” - பிரமாண்டத்தின் உச்சம்! தொடர்ந்து வந்த, “ சல்தே சல்தே, கல் ஹோ நா ஹோ , மெஹ்ன் ஹூன் நா,  வீர் சாரா, ஸ்வதேஷ் “ போன்ற படங்களின் பாடல்களும் அருமையாக இருக்கும். வர்த்தக ரீதியாக இந்த படங்களும் வெற்றி பெற்று, பாலிவுட்டின் முடிசூடா மன்னன் என்ற அந்தஸ்த்திற்கு உயர்ந்தார்.

அடுத்த வந்த “ பெஹலி “ படத்தை சற்று பொறுமையாகத்தான் பார்க்க வேண்டும்! மீண்டும் கரன் ஜோஹருடன் இணைந்த ” கபி அல்விதா நா கெஹனா “ படத்தில், வழக்கம்போலவே பாடல்கள் அருமையாக இருந்தன. படம்தான் குழப்பமாக இருக்கும். படம் முழுவதும் மொத்தமே ஆறு கேரக்டர்கள்... மாறி மாறி பேசிக்கொண்டே இருப்பார்கள். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனும் இணைந்து நடித்ததால் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. இந்தியாவை விட வெளி நாடுகளில் வசூலை அள்ளியது. நம்ம ஊரு ஆளுங்களுக்கு கொஞ்சம் பிடிக்காமல் போனதற்கு கதைக்களம் ஒரு காரணமாகும்!

அடுத்து வந்த “ டான் “ முழுக்க முழுக்க ஷாருக்கானின் ரசிகளுக்கான படம். பாடல்களும் நன்றாகத்தான் இருந்தன. அதிகப்படியான ட்விஸ்ட், படத்தின் நீளம் போன்றவை சலிப்படைய வைத்தன. ஆனால் ஷாருக்கின் ரசிகனாக எனக்கு பிடித்திருந்தது. பின்னர் வந்த ” சக் தே இந்தியா “ படத்தைப் பற்றி சொல்லத்தேவையில்லை. இந்தியா 20/20  கிரிக்கெட் உலகக்கோப்பையை முதல் முறையாக வென்றபொழுது இந்த படத்தின் பாடல் தான் இந்தியாவின் அனைத்து தொலைகாட்சிகளிலும் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. ஜோடி இல்லாத, ஃபாரீன் டூயட் இல்லாத, ரொமாண்டிக் காட்சிகள் இல்லாத ஷாருக்கானை இந்தப் படத்தில் காணமுடிந்தது....




அதன்பின்பு வந்த “ ஓம் ஷந்தி ஓம் “ பகடியின் உச்சம். தீபிகா படுகோனே அறிமுகமான படம். காமெடி, ரொமான்ஸ், செண்ட்டிமெண்ட்... என கலக்கியிருப்பார்கள். அதன் பின்னர் வந்த  “ ரப் நே பணா தி ஜோடி “-யும் காமெடி, ரொமான்ஸ், செண்ட்டிமெண்ட் நிறைந்த படம். படமும் பாடல்களும் ஹிட். ஷாருக்கானின் ஹேர் ஸ்டைல், ஃபன்னி வாக், டயலாக் டெலிவரி-க்காக ரொம்பவே மெனக்கெட்டிருப்பார்கள்.

” மை நேம் ஈஸ் கான் ” இன்னொரு செண்ட்டிமெண்ட் படம். பல வருட இடைவெளிக்கு பிறகு கஜோலுடன் இணைந்த படம். 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால், அமெரிக்கவாழ் முஸ்லீம்கள் என்னமாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதைப் பற்றின படம். கொஞ்சம் பொறுமையாகத்தான் பார்க்க வேண்டும். தலை சாய்த்து, ஒரு பக்கமாக திருப்பி, திருப்பி “ Mr. President, My Name is Khan, but I am not a Terrorist " என்று படம் முழுவதும் இவர் கூறும் வசனம் பிரபலம்....

அதன்பின் வந்த  “ ரா- ஒன் “ வீண் முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். உடனடியாக வெளிவந்த “ டான் 2 “ வழக்கம்போலவே ஷாருக்கின் ரசிகர்களுக்கானது.




அடுத்த வாரம், தீபாளியன்று வெளிவரவிருக்கும் “ ஜப் தக் ஹேய் ஜான் “
படத்தின் பாடல்கள் ஏற்கனே ஹிட் ஆகிவிட்டன. இசை ஏர்.ஆர்.ரகுமான். நீண்ட இடைவெளிக்கு பிறகு யாஷ் சோப்ராவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்த படம், வரும் முன்னரே யாஷ் சோப்ர இறக்க நேர்ந்தது மிகவும் வருத்தமான நிகழ்வாகும். ஷாருக்கானின் வெற்றி வரலாற்றில் யாஷ் சோப்ராவிற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு!

இந்தி சினிமாவைப் பொறுத்த வரை, ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான் என மூன்று கான்களின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. மற்ற இரண்டு கான்களும் எனக்கு பிடிக்குமென்றாலும், ஷாருக்கான் கொஞ்சம் கூடுதலாக பிடிக்கும்.

 பத்திரிகையாளர் ஒரு முறை ஆமீர் கானை பேட்டி கண்டபோது,
 “ ஷாருக்கிடம் ஒரு கேள்வி கேட்க நேர்ந்தால், என்ன கேட்பீர்கள் “ என கேட்டார். அதற்கு ஆமீர் கான், ” இரண்டாவது இடத்தில் இருப்பதைப் பற்றி உங்களுக்கு கவலையில்லையா “ என கேட்பேன் என்றார். இது குறித்து ஷாருக்கிடம் கருத்து கேட்டபொழுது, “ ஆமீருக்கு என் நன்றிகள்...   அட்லீஸ்ட் எனக்கு இரண்டாவது இடமாவது கொடுத்திருக்கார் “ என்றார் சிரித்தவாரே!



ஷாருக்-கஜோல் பாலிவுட்டின் மிகப்பிரபலாமான காம்பினேஷன்! ஷருக்கான் யாருடன் நடித்தாலும் பர்ஃபெக்ட்டாக பொருந்துவது இன்னொரு ப்ளஸ் பாய்ண்ட்....

 பாலிவுட்டின் பாட்ஷா என அமிதாப் பச்சனால் புகழாராம் சூட்டப்பட்ட, ஷாருக்கானுக்கு இன்று 47-வது பிறந்தநாள். வாழ்த்துக்கள் ஷாருக்!
தீபாவளிக்காக வையிட்டிங்!

பின்குறிப்பு :
இன்று காலை, ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் ஷாருக்கானின் பிறந்தநாள் என்று வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார். அதன் பின்னரே நான் ரசித்த ஷாருக் பற்றி ஏதாவது சொல்லலாம்ன்னு, எந்தவித ப்ரப்ரேஷனும் இன்றி, ஒவ்வொன்றாக  யோசித்து யோசித்து எழுதியிருக்கேன்...
ஏதாவது முக்கிய படங்கள் விடுபட்டிருக்கலாம், அல்லது வரிசை மாறியிருக்கலாம்!

One of the beautiful romantic scene

DARR SONG

இன்னொரு அட்டகாசமான பாடல்

jab tak hai jaan - trailer