Jan 26, 2013

விஸ்வரூபமும் திருட்டு டிவிடி-யும்!



வெளிநாடுகளிலிருந்தே தமிழ்த் திரைப்படங்களின் திருட்டு டிவிடிகள் இறக்குமதியாகின்றன என்பது பரவலான தகவல். இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படம் திருட்டு டிவிடியாகவோ, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவோ வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

சிறு முன்குறிப்பு:

2001 ஆம் ஆண்டு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தபிறகுதான் முதன்முதலாக ஃபிலிம் சிட்டியில் சினிமா ஷூட்டிங் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இரண்டரை மணி நேரம் நாம் பார்க்கும் சினிமாவை எத்தனை நாள், எத்தனைப் பேர் கஷ்டப்பட்டு உருவாக்குகின்றனர் என்பதை புரிந்துக்கொண்டேன். ஒரு நாள் முழுவதும் உழைத்து அதிகபட்சமாக 20 முதல் 30 ஷாட்களே எடுப்பார்கள். அதிலும் எத்தனை ரிஹல்ஸல்கள்... எத்தனை டேக்குகள்... பார்க்க நமக்கே கடுப்பாக இருக்கும். ஆனால் நடிப்பவர்கள், இயக்குனர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர்கள் ( குறிப்பாக உதவி ஒளிப்பதிவாளர்கள் ), லைட்மேன்கள், கார்பெண்டர்கள், சமையல் காரர்கள், மேக்- அப் மேன்கள்... என ஒவ்வொருவரும் பம்பரமாக சுழன்றுக்கொண்டிருப்பார்கள்... மிகக்கடுமையான உடல் உழைப்பும், பொறுமையும் வேண்டும்.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம், ரோஜா திரைப்படத்தின் ஆரம்ப காட்சி சூரியன் உதிப்பதற்கு முன்னதாக உள்ள அதிகாலை காட்சியாகும். பனி அடர்ந்த காட்டிற்குள் எடுத்திருப்பார்கள். அந்த காட்சியை எடுக்க, நள்ளிரவிற்கு பின் எழுந்திருந்து, கேமிரா, லைட், ஒளிப்பதிவு கருவிகள், உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள்... என அனைத்தையும் சுமந்துக்கொண்டு தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து காட்டிற்குள் செல்லவேண்டும்... அன்றைய அதிகாலை காட்சிகள் முடிந்ததும், மீதமுள்ள காட்சிகளை எடுக்க அடுத்த நாளும் இதே போல கிளம்பி வரவேண்டும். இடைப்பட்ட பகல் பொழுதுகளிலும் மற்ற காட்சிகளை எடுத்திருப்பார்கள்.
முதலாம் ஆண்டு டைரக்‌ஷன் வகுப்பில் விரிவுரையாளர் திரு. ரவிராஜ் கொடுத்த உதாரணம் இது!

சமீபத்தில் நண்பர்கள் சிலர் கோவா சென்றிருந்தோம். அங்குள்ள சப்போரா, அகுடா கோட்டைகளில் சில படங்களின் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் அனைத்து கருவிகளையும் சுமந்துக் கொண்டு கோட்டை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் கிடையாது....

எனது நண்பர் ஒருவர் தற்சமயம் பெங்காலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துக்கொண்டிருகின்றார். தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு நான்கு மணிநேரம் பயணம். ஷூட்டிங் முடிந்து அறைக்கு வந்ததும், அடுத்த நாள் எடுக்கவிருக்கும் காட்சிகளைக் குறித்து இயக்குனரிடம் ஆலோசனை செய்துவிட்டு நள்ளிரவு தூங்கி, மீண்டும் அதிகாலையில் நான்கு மணிநேரம் பயணிக்க வேண்டும்!

இவைகள் சிறு சிறு உதாரணங்கள் மட்டும்தான்... உழைப்பு என்பது எல்லாத்துறைகளிலும் தான் உள்ளது. சினிமாக்காரர்கள் மட்டும்தான் உழைக்கின்றார்களா என்ன? என்று நீங்கள் கேட்கலாம். மற்றத் துறைகளைக் காட்டிலும் கடுமையான உழைப்பிற்குப் பிறகு, அது உதாசீனப்படுத்துவதும், விமர்சிக்கப்படுவதும், லாபம் கிடைக்காமல் போவதும் சினிமாத்துறையில் மட்டுமே நிகழக்கூடிய கசப்பான உண்மை!

இதுபோன்ற சூழ்நிலைகளில் திருட்டு வீடியோ எனும் கலாச்சாரம் சினிமாவிற்கு எதிரான மிகப்பெரிய அரக்கனாக உருவாகிவிட்டது. நம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரியா, வங்காளம் போன்றவற்றில் இந்த அளவிற்கு திருட்டு டிவிடிகள் கலாச்சாரம் வளரவில்லை! ஆந்திரதேசத்தில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான் திருட்டு டிவிடிகளின் ஆதிக்கம் பெருகியுள்ளது. இருப்பினும் ஆந்திர சினிமா ரசிகர்கள் தியேட்டர் சென்று படம் பார்ப்பதையே பெரிதும் விரும்புகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. நடிகர் கார்த்தி ஒருமுறை இதனைக் குறிப்பிட்டு “ எனக்கு ஆந்திர ரசிகர்களைத்தான் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவர்கள்தான் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கின்றனர் “ என்றார். ஆனால் தமிழின ஆதரவாளர்களாகவும், தமிழ்க் கலாச்சாரத்தின் காவலர்களாகவும் தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் இணையதளப் போராளிகள் சிலர், கார்த்தியை தமிழினத்தின் துரோகியாக சித்தரித்து பிராச்சாரங்களில் ஈடுபட்டனர்... உண்மை நிலையை அறியாமல்!

அழிந்துக்கொண்டிருந்த சினிமா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து நிற்பது ஒலி, மற்றும் ஓரளவிற்க்கேனும் மேற்கத்திய நாட்டு படங்களுக்கு இணையான தரம் ஆகியவற்றால்தான்... அந்த வகையில் கமலஹாசன் அறிமுகப்படுத்திவை இந்திய சினிமாவில் ஏராளம் என்பது அனைவரும் அறிந்த உண்மை!

திருட்டு டிவிடியை முற்றிலும் ஒழிக்கமுடியாது எனினும், குறைந்தபட்சம் “விஸ்வரூபம்” படத்தினை மட்டுமாவது தியேட்டர்களில் ( தடை நீங்கி தமிழகத்தில் ரிலீஸாகும் பட்சத்தில் ) சென்று காண்போம்... அது ஏன் விஸ்வரூபம் படத்திற்கு படத்திற்கு மட்டும் இந்த ஆதரவு? காரணம் இந்த படத்தின் பட்ஜெட் ஏறத்தாழ 100 கோடிகள்! ஒரு கலைஞன் 100 கோடிகள் முதலீட்டில் தயாரித்த ஒரு படத்திற்கு ( படத்தினைப் பார்க்காமலேயே ) மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகியிருக்கும் அதே சூழலில், 30 ரூபாய் செலவில் டிவிடியாகவோ, ஆன்லைனில் பார்ப்பதோ ஒரு சிசு வளரும்போதே கொலை செய்வதற்கு சமமாகும்! விஸ்வரூபம் படத்திற்கு இன்னொரு நடைமுறைச்சிக்கலும் உள்ளது... இந்த வார இறுதியில் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் “கடல்” மற்றும் விக்ரம், ஜீவா இணைந்து நடிக்கும் “டேவிட்” ஆகிய படங்களும் ரிலீஸிற்கு தயாராகிவருகின்றன... தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல்கள் உள்ளன...

என்னுடைய திரைப்படத் துறை நண்பர்கள் சிலரிடம் புதியதாக வெளியான ஏதாவது படத்தினைக் குறிப்பிட்டு பார்த்தீர்களா என கேட்பேன். அவர்கள் ஆம் என்று பதிலளித்தால், தரத்தைப் பற்றி அறிய எந்த தியேட்டரில் என அடுத்த கேள்வியைக் கேட்பேன்... “ தியேட்டர்ல இல்ல.. டிவிடி யில “ என இளிப்பார்கள்... செருப்பால் அடிவாங்கியதைப்போல இருக்கும் எனக்கு! தியேட்டரில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்ற முடிவினால்தான் ஆரண்ய காண்டம், மதுபானக் கடை, அழகர்சாமியின் குதிரை, தென்மேற்கு பருவக்காற்று, கும்கி போன்ற படங்களை தவறவிட்டுவிட்டேன்... ( வேறு வழியின்றி ஆரண்ய காண்டம் மட்டும் டிவிடி வாங்கிப் பார்த்தேன் )

ஆகவே நண்பர்களே, விஸ்வரூபம் படத்தினை பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும், டிடிஎச்-ல் வெளியாவதும், வெளியானால் பார்ப்பதும் அவரவர் விருப்பம். பார்க்கவேண்டுமென முடிவெடுத்தால் திருட்டு டிவிடி-யை ஆதரிக்காமல் தியேட்டரில் சென்று பார்ப்பதை வலியுறுத்துவதே இந்த பதிவின் நோக்கம்!

ஒரு படத்தினைப் பார்க்கும் முன்னரே, ஒரு சில எதிர்ப்பாளர்களால் வெளிவரச்செய்யாமல் தடை வாங்க முடிகிறதெனில், பார்க்கவேண்டுமென முடிவெடுத்த கோடிக்கணக்கான தமிழக மக்களால் திருட்டு வீடியோவை நிராகரித்து தியேட்டர்களில் சென்று பார்க்கும் முடிவில் ஒன்றிணைவது சாத்தியமாகக்கூடிய ஒன்றுதான் என்பதே என் கருத்து! சாத்தியப்படுத்துவோம்...

திருட்டு டிவிடி நிராகரிப்பு எனும் பாஸிட்டிவான விஷயத்திற்காகவாவது இந்த விஷயத்தில் தமிழர்களாகிய நாம் ஒன்றுபடுவோம் என்பதே என்னுடைய ஆவல்!

No comments:

Post a Comment