Dec 2, 2013

சிந்தனையைத் தூண்டிய எழுத்து!

இமயமலைப் பயணத்தின் அனுபவங்களை ஓரளவிற்கேனும் நம்பகத்தன்மையுடனும் சுவாரஸ்யமாகவும் நண்பர்களுக்கு பகிர வேண்டும் எனும் நோக்கில் தான் “ப்ளாக்”-ல் விளையாட்டாக எழுத ஆரம்பித்தேன். ஆனால் சற்றும் எதிர்பாரா வண்ணம் சாரு ஆன்லைனில் லிங்க் கொடுத்து எனது பொறுப்புகளை இன்னும் கூடுதலாக்கிவிட்டார் சாரு.


பயணத்தின் அனுபவங்களை எழுதுமாறு என்னைத்தூண்டியதும் சாருவின் எழுத்துதான். சமீபத்திய சந்திப்பின்போது,

“ சாருவின் எழுத்து வாசகனை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கின்றது. வாசகனுக்கு முன்பாக பல வாசல்களைத் திறந்துவிடுகின்றது... ”

- என்று சிலாகித்து கூறினார் அராத்து. தனது தற்கொலைக் குறுங்கதைகளைப் பற்றின பேச்சினூடே , அதன்  ஆரம்பப்புள்ளி சாருவின் எழுத்திலிருந்து துவங்கியதைப் பற்றியும் விவரித்தார். அதுமட்டுமின்றி எழுத்தானது, வாசிப்பவனின் சிந்தனைகளை ஒரு கட்டுக்குள் அடக்கிவிடாமல் சுதந்திரமாக சிந்திக்க தூண்டுவதாகவும், தனக்கான பாதையினை நோக்கி இயங்க வைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டுமென சாருவும் அராத்துவும் ஒருசேர குறிப்பிட்டனர்!

கொஞ்சம் யோசித்துப் பார்த்த பின்புதான், இந்தப் பயணத்தைப் பற்றி என்னை எழுதத்தூண்டிய/ பயணத்தைக் குறித்த சிந்தனைகளைத் தூண்டியதும் எப்பொழுதோ படித்த  ( கடந்த வருடம் )  சாருவின்  எழுத்தும் விவரிப்பும் தான் என்பதை புரிந்துகொண்டேன்!

இதோ... அந்த சிந்தனையைத் தூண்டிய எழுத்து உங்கள் பார்வைக்கும்...






(  “ ராஸ லீலா ”- கண்ணாயிரம் பெருமாளின் கதை 11-ல் )



மேட்டூரில் காலை ஏழரை மணிக்கு இருக்க வேண்டும் என்பது திட்டம்; ஆனால், கூட வந்த ஒரு நண்பனின் ‘ ஆசனவாய்த் தொந்தரவினால் ’ சேலத்திலிருந்து கிளம்பும்போதே ஒரு மணி நேரம் தாமதம். மேட்டூர் போய்ச் சேர்ந்தபோது மணி பத்து. ஏழரையை உத்தேசித்து, மேட்டூர் பொதுப்பணித் துறையினர் தயாரித்து வைத்திருந்த இட்லி, தோசை, மீன் குழம்பு, மீன் வருவல் , கோழிக் குழம்பு எல்லாம் ஆறி ஜில்லிட்டுப்போயிருந்தன. ஆறின கஞ்சி பழங்கஞ்சி. தோசையெல்லாம் வறட்டு வறட்டென்று காய்ந்துபோயிருந்தது. ஆனால் மீன் வறுவல் ஆறிப்போயும் ருசியாக இருந்தது. காவிரியிலிருந்து பிடித்து அப்படியே சமைத்தது. ஐஸில் வைக்கப்பட்ட சென்னை மீனுக்கும் இதற்கும்தான் எத்தனை வித்தியாசம். இதைச் சுடச்சுட சாப்பிட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ‘ ஆசனவாய்ப் பிரச்சனை ’ நண்பரைச் சபித்துக்கொண்டே சாப்பிட்டான் பெருமாள்.

மீனின் பெயர் கேட்டான்… ‘Rogue’ என்றார்கள். வெறும் பெயரல்ல, காரணப் பெயர். ரவுடித்தனமாக மற்ற சிறிய மீன்களைப் பிடித்து சாப்பிட்டுவிடும் என்பதால் இந்தப் பெயர்.

பாவம் சங்கரா மீன். எவ்வளவு பெரிய மீனாக இருந்தாலும் சங்கரா மீன் அது பாட்டுக்கு சிவனே என்று கடலில் கிடக்கும். எந்த சக மீன்களுக்கும் எந்த இடைஞ்சலையும் தராது. அப்படிப்பட்ட அப்பாவி மீனுக்கா சங்கரா மீன் என்று பெயர் வைக்க வேண்டும்?  இந்த ‘ரோக்’ மீனுக்கல்லவா அந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும்? ஆனால் ரோக் மீன் ருசியில் கிட்டத்தட்ட trout மீனைப் போல் இருந்தது. Trout மீனுக்குத் தமிழ் வார்த்தை இல்லை. நன்னீர் மீன் என்று சொல்லலாம். ஸ்படிகம் போன்ற தூய்மையான தண்ணீரில் வளர்க்கப்படும் மீன். காஷ்மீரில் சாப்பிட்டிருக்கின்றான் பெருமாள். அதற்குப் பிறகு அதை உண்ணும் சந்தர்ப்பம் வரவில்லை.

மேட்டூரிலிருந்து ஹொகனேக்கலுக்கு 1942-ல் தயாரிக்கப்பட்ட ஒரு விசைப்படகில் கிளம்பினார்கள். டீசலில் இயங்கும் படகு அது. மணி 10.30.  ஐந்து மணி நேரப் பயணம். அதுவும், நதியின் போக்குக்கு எதிர்த்திசையில். படகுக்குள் சென்றதுமே காலணிகளைக் கழற்றிவிட்டான் பெருமாள். காலணிகளோடு நீச்சல் அடிப்பது கடினம். சுற்றிவரப் பார்த்தான். சமுத்திரத்தைப் போல் கண்காணாதவரை நிறைந்திருந்தது காவிரி. கரையே தெரியவில்லை. அவனுக்கு நீச்சல் தெரியும்தான். ஆனால் இவ்வளவு தூரத்தையும் கடக்க அவன் இன்றும் நீச்சல் காளி இல்லையே?

நீச்சல் காளியை அவன் தனிஷ்கோடியில் சந்தித்தான். தனுஷ்கோடியிலிருந்து ஸ்ரீலங்காவின் தலைமன்னார் வரை – 40 கி.மீ தூரம் – வெகு அனாயாசமாக நீந்திக்கடந்துக்கொண்டிருந்தவர் அவர்.   தனுஷ்கோடியில் குதித்து, 12 இலிருந்து 14 மணி நேரம் இடைவிடாமல் நீந்தி தலைமன்னார் சேர்ந்து, அங்கு இரண்டு மூன்று நாட்கள் இருந்துவிட்டு, மறுபடியும் நீந்தி தனுஷ்கோடி வந்து சேருவாராம். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. சமீபத்தில் கூட ப்யூலா செளத்ரி என்ற நீச்சல் வீராங்கனை தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்தியிருக்கின்றார். ஜிப்ரால்டர்  ஜலசந்தியைக் கூட நீந்திக் கடந்தவர் இந்த ப்யூலா. ஆனால் இதுபோன்ற நீச்சல் வீரர்களுக்கும், நீச்சல் காளிக்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் உள்ளது. நீச்சல் வீரர்களோடு கூடவே பாதுகாப்புக்காக விசைப்படகுகளில் ஆட்கள் செல்வார்கள். மின்விளக்கு வசதி, வழிகாட்டுவதற்கு ‘கைட்’ போன்ற எல்லா வசதியும் உண்டும். அதோடு, தண்ணீரிலேயே நீண்டநேரம் இருப்பதால் உடம்பில் சுளுக்கு, பிடிப்பு எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க உடம்பு பூராவும் ‘க்ரீம்’ தடவிக்கொள்வார்கள் நீச்சல் வீரர்கள். இது எல்லாவற்றையும்விட அவர்களுக்குள்ள அதிமுக்கிய வசதி என்னவென்றால், நீந்தமுடியவில்லையென்றால் நீச்சலை ரத்து செய்துவிட்டு படகில் ஏறி அமரலாம். ஆனால் நீச்சல் களிக்கு இதுபோன்ற வசதிகள் ஏதும் கிடையாது. களைப்பு ஏற்பட்டாலும் நீச்சலை நிறுத்த முடியாது, நிறுத்தினால் மரணம். மூச்சைப் பிடித்துக்கொண்டு தலைமன்னார் வரை நீந்தியே ஆக வேண்டும்; ஒற்றை ஆளாக… 40 கி.மீ… 14 மணி நேரம்…

“ வழியில் திமிங்கலம் போன்ற கடல் மிருகங்களால் ஆபத்து ஏற்படாதா? ” என்று அவரைச் சந்தித்தபோது கேட்டான் பெருமாள்.

“ அதெல்லாம் நிலத்தில் உள்ளவர்களின் கேள்வி தம்பி… அதுங்க பாட்டுக்கு அதுங்க வேலயப் பாத்துக்கிட்டு போவும். நம்மள அண்டாது…” என்றார் சிரித்துக்கொண்டே. பெரும் கானகங்களில் மூர்க்க விலங்குகளோடு வாழும் துறவிகளின் பதிலைப் போலிருந்தது நீச்சல் காளியின் பதில். இதில் ‘ மூர்க்க விலங்குகள் ’ என்ற பதமே பெருமாளைப் போன்ற சராசரிகளினுடையது.

மிஞ்சிப் போனால் அந்தக் காவிரியில் ஒரு மணிநேரம் நீந்தலாம் என்று நினைத்துக்கொண்டான். ம்ஹூம்… அதற்கும் வாய்ப்பில்லை. கூட வந்தவர்களுக்கு நீச்சல் தெரியாதாம்.

” பெருமாள், என்னை நீ காப்பாற்றாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன் ” என்றான் நரேன். அந்த வாக்கியத்தில் இருந்த இலக்கணப் பிழையை எண்ணி ரசித்தான் பெருமாள்.

ஆனால் பாலு down to earth மனிதன். நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

“ தோ பார். கரய வுட்டுக் கெளம்பி வர அர அவ்ர்தான் ஆவுது. பேசாம படகத் திருப்பிடுவோம். பை ரோட் போய்க்கலாம்… எனக்கு நீச்சல் தெரியும். ஆனா ஒன் அவர்தான் நீஞ்ச முடியும். அதுக்கே வாய்ல நுரை தள்ளும்…”

ஆனல இதெல்லாம் வெற்று பயம் என்று தெரிந்தது. காரணம் படகின் மேலேயே ஒரு பரிசல் இருந்தது.

இருந்தாலும் அந்த ஐந்து மணி நேரப் பயணத்தில் பெருமாள் மது அருந்தவில்லை. போதையுடன் நீச்சல் அடிக்க முடியாதே!

நதியின் நீரோட்டம் வாலைக்குமரி ஒருத்தியின் திமிறும் உடற்கட்டை ஞாபகப்படுத்தியது. காமவுணர்வை வெகுவாகத் தூண்டும் காட்சியாக இருந்தது.

மரண பயம்… காம உணர்வு… திரும்பவும் Georges Bataille இன் தத்துவார்த்தப் பிரச்சனைக்கு வந்து சேர்ந்துவிட்டோம். மரணம் – காமம் – மரணம் – ஜனனம்… இது ஒரி வட்டச் சுழற்சி எனத் தோன்றியது.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்தான் பாலு. அவன் பேச்சை யாரும் கேட்கவில்லை. ஆசாமி தூங்கிவிட்டான். தூக்கமும் ஒருவகையில் மரணம்தானே? ஆனால் ஒரு நிச்சயம் இருக்கிறது, ‘ எழுந்துவிடுவோம் ’ என்று. மரணத்தில் அப்படியில்லை, மறுபிறவி பற்றி அவ்வளவு நிச்சயமில்லை. ‘ பிறவாதிருத்தல் வேண்டும்…’ எல்லா ஞானிகளும் இதையேதான் சொல்கிறார்கள். பிறவாமை வேண்டும்… பிறவித் துன்பம்… மனித வாழ்க்கை அவ்வளவு துயரகரமானதா என்ன?

பாலு விழித்துக்கொண்டுவிட்டான். மேட்டூரிலிருந்து கிளம்பி மூன்று மணிநேரம் ஆகியிருக்கும். இப்போது பெருமாளுக்கு பயம் நீங்கிவிட்டது. காரணம், காவிரி அங்கே குறுகியிருந்தது. கரையில் ஓரிரு குடிசைகள் தெரிந்தன. ஒரு குடிசையிலிருந்து மற்றொரு குடிசைக்கு இரண்டு கி.மீ தூரமாவது இருக்கும். குடிசைக்குப் பக்கத்தில் ஒன்றிரண்டு ஆடுமாடுகள். வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தார்கள். படகின் முன்பக்கம் நரேன் இருந்தான். பெருமாளும், பாலுவும் வால் பகுதியில். அப்போது… கரையில் ஒரு குடிசை… குடிசையின் வாசலில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். அக்கம்பக்கம் கண்ணுக்கெட்டிய தூரம் யாருமில்லை. மின்சாரம் இல்லை, தொலைக்காட்சி இல்லை, புத்தகங்கள் இல்லை. அந்தப் பெண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா என்பது சந்தேகமே.

அவள் அமர்ந்திருந்தது ஒரு ஓவியத்தைப் போல் இருந்தது. ஒரு சிறிய பாறையில் அமர்ந்து கன்னத்தில் கைவத்தபடி எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் எதையும் பார்க்கவில்லை. சூன்யத்தில் நிலைத்திருந்தது அவள் பார்வை. அவள் மனதில் இப்போது எதைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பாள்?

திடீரென்று பாலி அந்தப் பெண்ணைப் பார்த்து கையசைத்தான்., அந்தப் பெண்ணும் அதைக் கவனித்துவிட்டாள். அவள் கண்களில் ஒரு மின்னல் பொறி. இவர்கள் சற்றும் எதிர்பாராத வண்ணம் சட்டென்று அவளும் பாலுவைப் பார்த்து கையசைத்தாள். ( இதைப் பற்றி பாலு பின்னர் விவரிக்கும்போது, “அவள் ஒன்றும் உடனே கையசைத்துவிடவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்து aim பண்ணி, நல்ல பர்ஸனான்னு பார்த்துத்தான் கையசைத்தாள் ” என்றான். ) ஆனால், என்ன ஒரு கொடுமை… அவளுக்கும் படகுக்கும் நடுவே ஒரு குன்று வந்து குறுக்கிட்டது. அவளை மீண்டும் பார்க்க முடியுமா என இவர்கள் மனம் பதற்றம் கொண்டது.

நல்லவேளை… படகு ஓரிரு நிமிடங்களில் அந்தக் குன்றைச் சுற்றி வந்தபோது மீண்டும் அவள் தெரிந்தாள். அதற்குள் அவள் வேறு ஓர் இடத்திற்கு ஓடி வந்திருந்தாள். இப்போது பாலு தாமதிக்கவில்லை, உடனே கொடுத்தான் ஒரு பறக்கும் முத்தம்.

என்னடா இது வாழ்க்கை. அதை என்னவென்று சொல்வது? அவளும் கொடுத்துவிட்டாள் ஒரு பறக்கும் முத்தம்.

கிட்டத்தட்ட ஒரு பரவச நிலையில் இருப்பவளைப் போலிருந்தாள் அவள். காலங்காலமாக மனித முகத்தையே பார்த்திராதவளைப் போலிருந்தது அவளது பரவசம். ஒருவேளை இப்படி ஒரு விசைப்படகை இப்போதுதான் பார்க்கிறாள் போலும்.

அவளுடைய அடுத்த கட்ட நடவடிக்கைதான் இன்னும் ஆச்சர்யமானது. தான் இருந்த இடத்தை விட்டு படகு தன் பார்வையை விட்டு மறையாதவாறு ஓடி வந்தபடியே கையினால் ’ வா, வா ’என்று பாலுவை நோக்கி சைகை காண்பித்தாள். அவளது உடல் அசைவுகள் அவளது பதற்றத்தையும், ஆர்வத்தையும், தனிமையின் துயரத்தையும், அத்தனிமையிலிருந்து விடுபட்டு மனித முகங்களைக் கண்ட வெறி கொண்ட சந்தோஷத்தையும் கலந்த அந்த அபூர்வம் – அந்தக் கொந்தளிப்பு இன்னும் ஓரிரு கணங்களில் தன்னை விட்டுப் போய்விடுமோ என்ற அடிவயிற்றுக் கதறலையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தன.

பாலு, படகை விட்டு வெளியே வந்து நின்று, ‘ இங்கே படகில் ஆட்கள் இருக்கிறார்கள், என்னால் வர முடியாது ’ என்பது போல் சைகை காட்டினான்.

பெருமாள் விக்கித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆனால், அந்தப் பெண் விடவில்லை. இவர்கள் பார்வையிலிருந்து மறையும் வரை அவள் படகின் திசையில் ஓடி வந்துக்கொண்டிருந்தது தெரிந்தது.

இவ்வளவு சுருக்கமான – இவ்வளவு தீவிரமான – ஒரு காதல் கதையை பெருமாள் அதுவரை கண்டதுமில்லை, கேட்டதுமில்லை.

**********************************************************************************************************************

கதையின் ஆரம்பத்தில் காவிரியை வர்ணிக்க இவ்வாறு குறிப்பிடும் சாரு,

// சுற்றிவரப் பார்த்தான். சமுத்திரத்தைப் போல் கண்காணாதவரை நிறைந்திருந்தது காவிரி. கரையே தெரியவில்லை //

“ கண்காணாதவரை “ மற்றும் ” கண்ணுக்கெட்டிய தூரம் “ எனும் இருவேறு வார்த்தை பிரயோகங்களை தேவைக்கேற்ப எவ்வாறு பயன்படுத்துகின்றார் என்பதை கதையின் இறுதியில் வரும் வாசகங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்!

// குடிசையின் வாசலில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். அக்கம்பக்கம் கண்ணுக்கெட்டிய தூரம் யாருமில்லை //

இதுதான் வார்த்தை விளையாட்டு. மேம்போக்காக வாசித்தால் இந்த ஜாலங்களை உணராமலேயே கடந்து போகக் கூடும்.


சங்கரா மீனுக்கும் ரோக் மீனுக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்குகின்றார். ட்ராட் மீன் காஷ்மீரில் தான் கிடைக்குமென தகவல் தெரிவிக்கின்றார்.
வாசிப்பினூடே ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்து செல்கின்றார்...// மரண பயம்… காம உணர்வு… திரும்பவும் Georges Bataille இன் தத்துவார்த்தப் பிரச்சனைக்கு வந்து சேர்ந்துவிட்டோம். மரணம் – காமம் – மரணம் – ஜனனம்… இது ஒரி வட்டச் சுழற்சி எனத் தோன்றியது. // என உலக இலக்கியவாதியையும், தத்துவத்தையும் அறிமுகப்படுத்துகின்றார்.

இவை தவிர, ராஸ லீலாவில் வாசகனின் சிந்தனைகளைத் தூண்டக்கூடியவை ஏராளம்...ஏராளம்!


சரி... கொஞ்சம் இமயமலைக்கு வருவோம்.



இமயமலைப் பயணத்தின் போது பெரும்பாலான புகைப்படங்கள் வேனுக்குள் அமர்ந்தவாறு போகிறப்போக்கில் எடுத்தவை!

சாரு, காவிரி நதியோர குன்றில் குறிப்பிட்ட இளம்பெண்ணைப் போல இமயமலையிலும் சில பெண்களைக் காண நேரிட்டது. ( ஆனால் தீவிரம் மிக்க காதல் கதை கிடையாது )

ரொதாங் பாஸ் -ஐ கடக்க மலையேறும்போது சாலையோரத்தில் நின்றபடி மலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண். சுற்றும் முற்றும் ஒருவருமில்லை. ஆடு மேய்ப்பவளாக இருக்கக்கூடும் என தோன்றுமளவிற்கு கண்ணுக்கு புலப்பட்ட தூரம் வரை மந்தைகளும் இல்லை!

அங்கு நின்று எதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்திருப்பாள் என்பதற்கு ஆயுள் முழுவதும் பதில் கிடைக்கப்போவதில்லை எனக்கு.


                          



அடுத்து,
ஜிஸ்பாவைக் கடந்து சார்ச்சு பயணித்த அதிகாலைப் பொழுதொன்றில்
சிறுமி ஒருத்தி தன்னந்தனியாக  “ஐந்தாங்கல் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளது ஒவ்வொரு அசைவும், தனக்குத்தானே சிரித்து/ பேசிக்கொண்ட அந்த கொள்ளை அழகும் இதுவரையிலான உலகசினிமாக்களில் பதிவு செய்யப்படாதது! அது ஒரு கவிதை! வார்த்தைகளை யோசிக்கத்தூண்டாத கவிதை!

                          


                                 
                           

பரத்பூர் எனும் தற்காலிக கிராமத்தில், தற்காலிக கூடாரமொன்றில் பயணிகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் கூடார பணிப்பெண் ஒருவரை மேலேயுள்ள படத்தில் காணலாம்!

                             
மலையுச்சி ஒன்றில் தன்னந்தனியாக அமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பெண்மணி ஒருவர்... இவர் உடன் வந்தவர்கள் ஒருவரும் கண்களுக்கு புலப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!