Aug 30, 2016

தமிழ் சினிமாவில் பாடல்கள் #2


                      


 

                   


         


தமிழ் சினிமாவில் பாடல்களைப் படமாக்குவதில் கிரியேட்டிவிட்டி, மெனக்கெடல், கலைநயம், அழகியல் சார்ந்த விஷயங்கள் போன்றவற்றில் ஒளிப்பதிவாளர் ஜீவாவின் கேமரா நிகர் இல்லாதது. இது எனது தனிப்பட்ட கருத்து. இந்தியன் படத்தில் வரும் இந்த மாண்டேஜ் பாடலில் பல விஷயங்கள் நுணுக்கமாக அழகியல் தன்மையுடன் ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருக்கும். பாடல்களைப் படமாக்க ( குறிப்பாக மாண்டேஜ் பாடல்களை ) அதற்கென்று ஸ்க்ரிப்ட் ஒன்றும் செய்ய வேண்டும். அது கதையுடன் பயணிக்க வேண்டும். பாடல் வரிகளுக்கு ஏற்ப காட்சிகள் இருக்க வேண்டும். பார்வையாளர்கள் காலத்துக்கும் அதை ரசித்துப் பார்க்க வேண்டும். அந்த வகையில் இந்தப் பாடல் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும். பாடலை ஒரு முறை பாருங்கள். பின்னர் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் இங்கே கீழே ஒரு முறை வாசியுங்கள். எவ்வளவு விஷயங்கள்...! இவை அனைத்தும் ஐந்து நிமிட பாடலுக்குள் அடங்கிவிடும். ஒளிப்பதிவு - எடிட்டிங் இரண்டும் சரிவிகிதமாக இங்கே விளையாடியிருக்கும்! கூடவே பாடல் வரிகளும், இசையும், ஜேசுதாஸின் குரலும்!
இனி காட்சிகள்...
* அதிகாலையில் எழுந்திருப்பாள்.
* ஆட்டுக்குட்டியைக் கொஞ்சுவாள்.
* நீருடன் விளையாடுவாள்.
* பரதநாட்டிய வகுப்பு.
* பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும்போது குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, அண்ணன் மூவரின் ரியாக்‌ஷன்கள்.
* பரதநாட்டிய பாடலில் கடுப்பான அண்ணன் களமிறங்கி ஆடும் நடனம். அப்போது மாறும் இசை.
* பொய்க்கால் குதிரையுடன் அந்த சின்னஞ்சிறு குடும்பமே சந்தோஷமாக விளையாடுவது! ( இவை அனைத்தும் ஸ்லோ மோஷனில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் )
* அப்பா - அம்மா இருவர்களது கைகளையும் ஒன்றாக இணைத்து விரல்களுக்கு மருதாணி வைத்து கிச்சு கிச்சு மூட்டுவது!
* காகிதக் கப்பல் செய்து ஆற்றில் விட்டு விளையாடுவது. காகிதம் காலியானதும் அழுது அடம் பிடிக்கும் மகளுக்கு நூறு ரூபாய் தாள்களை கொடுத்து கப்பல் செய்து ஆற்றில் விட வைக்கும் காட்சி! அப்போது பின்னணியில் ஒலிக்கும் “ அட, பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு” எனும் வரிகள். ( ஒரு ரூபாய் கூட லஞ்சம் தராத கொள்கைவாதி நமது இந்தியன் தாத்தா என்பது கவனிக்க வேண்டிய விஷயம் )
* அம்மா, தங்கை இருவரது ஜடையையும் ஒன்றாக பின்னி விளையாடும் மகன். சிரித்தபடியே வேடிக்கைப் பார்க்கும் அப்பா!
* பல்லவி முடிந்து இசை ஆரம்பமாகும்போது அந்த இசைக்கு ஏற்றபடி ரிதமிக்காக சிங்க் ஆகும் காட்சிகள்.
1.47 -இல் இருந்து பார்த்தால் அது புரியும்!
* இந்தியன் தாத்தா சேற்றில் நடனமாட, அவருக்கு பின்னால் அவரது மனைவியும் அவரைப் போல நடனமாடும் காட்சியும், அவர் திரும்பியதும் சட்டென சுதாரிக்கும் பாட்டியின் ரியாக்‌ஷன். நக்கலாக மனைவி நடக்க, ஒற்றைக் காலால் நடனமாடியபடி மனைவியை ரசிக்கும் இந்தியன் தாத்தா! இவை ஸ்லோ மோஷனில் படமாக்கப்பட்டிருக்கும்.
* பட்டம் பறக்க விடுவது. அப்பா ஏர் உழும்போது அதில் அமர்ந்து பயணிக்கும் மகள். இது டாப் ஆங்கிள் ஷாட்டில் காட்டப்படும். கரிசல் மண்ணில், வெண்ணிற உடையில் நான்கு பேரும் குடை பிடித்து செல்லும் காட்சி. ஆளுக்கொரு சின்னஞ்சிறு குடையை தலையில் கட்டிக்கொண்டு மழைபெய்யும்போது ஆற்றில் விளையாடுவது. அந்தச் சின்ன குடைக்குள் இந்தியன் தாத்தாவும், அவரது மனைவியும் அடைக்கலமாவது. ஆற்றின் நடுவில் டைனிங் டேபிள் அமைத்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்துவது. அப்போது நிலைத்தடுமாறி மகன் பின்னோக்கி விழுவது. இரண்டு கமல் என்பதால் கீழே விழும் ( டூப் ) கமல் குடை பிடித்து தனது முகத்தை மறைத்துக்கொண்டிருப்பார். அதற்கு முந்தைய காட்சிகளில் அனைவரும் அந்தக் குடையை தலையில் கட்டியிருப்பதால் இந்த ( டூப் ) கமல் முகம் தெரியாவிட்டாலும் பார்வையாளர்கள் அது கமல் என்றே நம்புவார்கள். ( இதெல்லாம் எடிட்டிங் & ஷாட் டிவிஷனில் படிக்க வேண்டிய பாடங்கள்! ) அப்பாவின் நரைமுடிகளை பிடுங்கி, அப்பா போலவே ஓர் ஓவியத்தை உண்டாக்குவது....
முதலாவது சரணத்தின்போது காட்சிப்படுத்திய காட்சிகள் இவை!
* இளநீரில் பீர் கலந்து அம்மாவுக்கு குடிக்க கொடுப்பது. அதைக் குடித்துவிட்டு அம்மா செய்யும் ரகளை... அவர் முத்தம் கொடுக்கும் போது இந்தியன் தாத்தா வெட்கப்படும் தருணம்.
* வேப்பங்குச்சியில் பேஸ்ட்டை வைத்து பல் துலக்கும் யுக்தி.
* தானே தச்சுப்பணி செய்து மகளுக்கு செய்து தரும் மர பொம்மை. எப்போதும் அதனுடன் வலம் வரும் மகள்.
* பெண் பார்க்க வரும் காட்சி. மாப்பிள்ளை வேண்டாம் என்று கார் முழுக்க சாணி தட்டி வைப்பது. இந்த மாப்பிள்ளைக்கு என்னம்மா குறை என்று கேட்கும் அப்பாவிடம் நான் எப்பவும் உங்க கூடவே இருக்கேன் என்று செய்கைகளின் மூலமாகவே உணர்த்தும் காட்சிகள்.
* இந்தியன் தாத்தாவுக்கு போட்ட மேக்-அப் கலையாமல் பயபக்தியுடன் அவருக்கு ஷேவிங் செய்துவிடும் காட்சி.
* மாலை வேளையில் வயதான கணவனும் மனைவியும் வீட்டு வாசலில் அமர்ந்து ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டும் காட்சி.
* காது வரைக்கும் கம்பளி போர்த்தும் காட்சி.
* உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம் என்று காட்சிப்படுத்திய விதம்!
* எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு கமல்களும் ஒன்றாக நடனமாடும் காட்சி. அப்போது பின்னணியில் உள்ள பீரோவில் உள்ள கண்ணாடியில் பிரதிபலிக்கும் இருவரது பிம்பமும்... 1996 -இல் இதன் கிராபிக்ஸ்...
என இந்தப் பாடல் மாண்டேஜ் பாடல்களுக்கு ஓர் பாடம்!

Aug 28, 2016

தமிழ் சினிமாவில் பாடல்கள்...



தமிழ் சினிமாவில் பாடல்கள் #1




                                      


இந்திய சினிமாக்களில் பாடல்களின் முக்கியத்துவம் என்னவென்று நம் அனைவருக்கும் நன்கு தெரியும் என்பதால் நேரடியாக விஷயத்துக்கு போய்விடலாம்.

தமிழ் சினிமாக்களில் பாடல்கள் படமாக்கப்பட்ட விதம், கதையை சுவாரஸ்யப்படுத்த அவை உதவிய விதங்கள் குறித்து எழுத வேண்டும் என்பது பல வருடமாக நிறைவேறாத திட்டங்களுள் ஒன்று. இப்போது அதை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

கூடுமானவரை தினமும் ஒரு பாடல் குறித்து அலச வேண்டும் என்பது இப்போதைய திட்டம். பார்ப்போம்!

இந்தத் தொடரில் பாடல்கள் படமாக்கப்பட்ட இடங்கள், கேமரா கோணங்கள் & மூவ்மெண்டுகள், எடிட்டிங், சிறப்பு சப்தங்கள், நடிகர்களின் முக பாவனைகள், நடனம், கதைப் போக்கிற்கு அப்பாடல் உதவிய விதம், ஆர்ட் டைரக்‌ஷன் உள்ளிட்ட பலவற்றை நான் பார்த்து ரசித்த அனுபவங்களின் அடிப்படையில் அலசப்போகிறேன். அதற்காக, நான் இங்கு குறிப்பிடும் பாடல்களும் / விஷயங்களும் மட்டுமே சிறந்தவை அன்று பொருள் அல்ல!


இனி முதலாவது பாடலைப் பார்ப்போம்!

இது போன்ற தொடர் எழுத வேண்டும் என்று தோன்றியதுமே சட்டென நினைவில் வந்தப் பாடல் அலைபாயுதே படத்தின் “ பச்சை நிறமே ” பாடல் தான்!
                                                                   


நிறங்களை மையமாக வைத்து ஒவ்வொரு நிறத்துக்கும், தான் காதல் கொண்டிருக்கும் பெண்ணிற்குமான தொடர்பை விவரித்திருக்கும் இந்தப் பாடல். பாடலுக்கு பெரிதும் உதவியவை இசையும், ஒளிப்பதிவும் தான்!

ஒவ்வொரு வர்ணத்தைப் பற்றிய வரிகள் வரும்போதும் அதன் பின்னணி முழுக்கவே அந்த வண்ணம் மட்டுமே பிரதானமாக தெரியும். பச்சை நிறம் பற்றி பாடும் போது ஆற்றங்கரைக்கு அப்பால் புல் கட்டைத் தூக்கிச் செல்லும் கிராமவாசிகள் கூட பச்சை நிறத்திலேயே உடையணிந்து நடந்து போவார்கள்!
முதல் ஃப்ரேம் ஆரம்பமாகும் போதே பச்சை இலைகளினூடே கேமரா ஊர்ந்து செல்லும். இசைக்கு ஏற்ப நளினமாக பச்சை வண்ண உடையில் உடலையும் உடையையும் வளைத்துக்கொண்டிருப்பார் கதாநாயகி.
ஸ்லோமோஷனில் படமாக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சிகள் மெல்ல மெல்ல நம் மனதிலும் ஊடுருவும்.

சூரிய ஒளியானது ஒரு பொருளின் மீது படும் போது அப்பொருள் கூடுதல் அழகு பெறும். இதை கேமராவில் கொண்டு வருவது சிறப்பானதொரு கலையாகும். இந்தப் பாடலில் 1.05 நொடியிலிருந்து 2.14 வரை சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தைப் பற்றி பாடும் போது சூரிய ஒளியைக் கையாண்டு ஃப்ரேம் பண்ண விதங்கள் அட்டகாசமாக இருக்கும்.

அலைபாயுதேவிற்கு முந்தையப் படங்களில் பெரும்பாலும் நெற்றிப்பொட்டு இல்லாமல் நடித்திருப்பார் ஷாலினி. சிவப்பு நிறத்தப் பற்றி வர்ணிக்கும் போது அவர் வைத்திருக்கும் பெரிய சைஸ் சிவப்பு நெற்றி பொட்டு அவருக்கு கூடுதல் அழகை கொடுத்திருக்கும். சிவப்பு மிளகாயைக் கடிக்கும் காட்சியில் நமது நாக்கில் காரம் படர்ந்துவிடும்... படமாக்கப்பட்ட விதம் அந்த மாதிரி!

அடுத்தடுத்து சொல்லப்போகும் நிறத்தை, பாடல் வரிகள் ஆரம்பிக்கும் முன்னதாகவே விஷுவலாக நமக்கு காட்டி விடுவார்கள்

நீல நிறத்தைப் பற்றி பாடும் போது அழகான நீல நிறத்தின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்பட்டிருக்கும்.

3.21 -லிருந்து நாயகி ஓடிக்கொண்டிருக்க நாயகன் துரத்திக்கொண்டிருப்பார். கேமராவும் பல கோணங்களில் கூடவே துரத்தும்.  ஃபிலிமில் படமாக்கப்பட்ட காலங்களில் சினிமாஸ்கோப் லென்ஸ்களை பயன்படுத்தியபோது ஒருவர் ஓடுவதை / துரத்துவதை ( மூவ்மெண்டுகளுடன் ) படமாக்கும்போது அவரது தலை, கால் எதுவும் ‘கட்’ ஆகாமல் படமாக்குவதும் ஒரு கலைதான். இதிலும் அது சிறப்பாக கையாளப்பட்டிருக்கும். 3.41 -இல் ஓடிக் களைத்து தனது வேகத்தைக் குறைப்பார் நாயகன். அப்போது இசையும் தனது வேகத்தைக் குறைத்துக் கொள்ளும். ஒளியும் ஒலியும் ஒருசேர கையாள்வதின் ரிதம் இதுபோன்ற காட்சிகளில்தான் இருக்கிறது!

க்ருமை நிறத்தின் கார்காலம் குறித்து பாடல் வரிகள் வரும்போது மழைக்கால மேக மூட்டத்துடன் ஒரு ஷாட் வந்து போகும். இது போன்ற கால நிலைக்காகவும் காத்திருக்க வேண்டும். அதை கச்சிதமாக பாடல்களினிடையே இணைக்கவும் வேண்டும். இதெல்லாம் சேர்த்துத்தான் ஒரு பாடலுக்கு அழகியல் தன்மையை மேலும் மெருகேற்ற செய்யும்.

வெண்மை நிறம் பற்றி பாடும் போது,  ஃப்ரேம் முழுக்க வெண்ணிற milky shade ஒன்று படர்ந்துவிடும். பழுப்பு நிற மண், பச்சை வண்ண மரங்கள் மீது கூட மெல்லிய வெண்மை படர்ந்திருக்கும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால்,  சொல்ல வந்த கான்செப்டை முன்னிறுத்தி படமாக்கப்பட்டதில் இந்தப் பாடல் சிறப்பிலும் சிறப்பான ஒன்றாகும்.

கேமரா மூவ்மெண்டுகள், தேவையான இடங்களில் இசைக்கேற்ப ஸ்லோ மோஷன் ஷாட்டுகள், அதற்கேற்ப நடன அசைவுகள், அவர்களின் உடை தேர்வு, படமாக்கப்பட்ட இடங்கள், இளம் நாயகன் - நாயகியின் ஃப்ரெஷ்ணஸ் என எல்லாமே சிறப்பாக இருக்கும்.

Dissolve, Fade In - Fade Out  போன்ற டிபிகலான ஸ்பெஷல் ஃஎபெக்டுகள் எதுவும் இப்பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்காது என்பது கூடுதல் ஆச்சர்ய செய்தி. பாடலின் கடைசி ஷாட்டில் மட்டும் தாஜ்மாஹாலின் பின்னணியில் நாயகன் எகிறி குதிக்கும் போது fade out பயன்படுத்தப்பட்டுருக்கும்!

அடுத்தப் பாடலில் பார்ப்போம் நண்பர்களே...

Aug 20, 2016

அஜித்குமாரும் அவரது ரசிகர்களும் - நிகழ்ந்த அற்புதம்!


அஜித்குமார் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் (நல்ல) சினிமா விரும்பிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான விளக்க பதிவு. எங்களைப் பிடிக்காதோர் இதைப் படித்து உங்கள் நிம்மதியைக் கெடுத்து கொள்ளாதீர்கள்.
முழுசா படிக்க பொறுமை இல்லாதவர்களுக்காக... பதிவின் சாராம்சம் இதுதான் :
மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்லிவிட்டே ரசிகர்களுக்காக மட்டுமே படம் நடிக்கிறார் அஜித்குமார். அவருக்காக மட்டுமே அவர் படங்களைப் பார்க்கிறோம் நாங்கள். எங்கள் இருவருக்குமான உணர்வுப்பூர்வமான புரிதல் இது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு நாள் முழுக்கவும் ஆட்டமிழக்காமல் ஷேவாக் நின்னு விளையாடினால் எவ்வளவு பரவசமாக பார்ப்போமோ அதை விட கூடுதலான பரவசம்தான் அஜித்குமாரை திரையில் பார்க்கும்போது!
( இருந்தாலும், முழுசா படிச்சாதான் பல குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்கும்  )

                                                                                                               


இனி மேட்டர்...
* 2001 -ஆம் ஆண்டு சிட்டிசன் படம் வெளிவரும்போது அஜித்குமார் தனது கேரியரின் உச்சத்தில் இருந்தார். படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அமர்க்களம் படம் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அறியப்பட்டாலும், தீனா மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து வந்தப் படம் என்பதால் சிட்டிசனுக்கு எதிர்பார்ப்பு எகிறியது.
அவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கிறது என்று இன்றளவும் சொல்ல காரணமாக அமைந்தப் படம் சிட்டிசன். அப்போது அவரது வயது 30. யோசித்துப் பார்த்தால் அதற்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் 30 வயதைக் கடந்த எவருக்கும் அப்போதைய அஜித் கொண்டிருந்த ரசிகர்கள் பலமும், மாஸ் ஓப்பனிங்கும் இன்னும் அமையவில்லை என்பதே உண்மை. இதில் விஜய்யும் அஜித்தும் சமமானவர்களே!
* 2002 -இல் ரெட், ராஜா என அடுத்தடுத்த தோல்விகள். வில்லன் வெற்றிபெற்றது. ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்த 2003 தீபாவளிக்கு வெளியான ஆஞ்சினேயாவும் தோல்வி. இடையில் கார் ரேஸில் ஈடுபாடு கொண்டு வெறித்தனமாக அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து செய்ய வேண்டிய மிரட்டல் கைவிடப்படுகிறது. 2004 -இல் வந்த ஜனா படுதோல்வி. லிங்குசாமியுடன் கைகோர்த்த ஜி படம் தள்ளி போகிறது...
இதே காலகட்டத்தில் பகவதி, புதிய கீதை என ஃப்ளாப்கள் கொடுத்தாலும் யூத், வசீகரா, திருமலை படங்களின் மூலம் தன்னைத் தக்க வைத்துக்கொள்கிறார் விஜய். கில்லி மூலம் பட்டி தொட்டியெங்கும் சொல்லி அடிக்கிறார். கூடவே தில், ஜெமினி, தூள், சாமி, அந்நியன் படங்களின் மூலம் விக்ரமும் போட்டிக்கு வந்து அஜித் இடத்தை பகிர்ந்துகொண்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் சூர்யாவும்!
* கமர்ஷியல் வெற்றி தேவை எனும் கட்டாயத்தில் இருக்கும்போது 2004 தீபாவளிக்கு அட்டகாசம் வந்து ஆறுதல் அளிக்கிறது ரசிகர்களுக்கு. நீண்ட நாள் கிடப்பிலிருந்து வெளியான ஜி ரசிகர்களையே சோதித்து அனுப்பியது. காட்ஃபாதர் படம் ஆரம்பித்து நிறுத்தப்படுகிறது. நான் கடவுள் படப் பிரச்சினை. மீண்டும் கார் ரேஸ்... கிட்டத்தட்ட 2005 -ஆம் ஆண்டு முழுக்க அஜித் எனும் நடிகர் கோடம்பாக்கத்தில் இல்லவே இல்லை! மீடியாக்கள், பாடல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சானல்கள் கூட அஜித்குமாரை புறக்கணித்தன. அதே காலகட்டத்தில் திருப்பாச்சி, சிவகாசி என மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார் விஜய்!
* வீறுகொண்டு வந்து இரண்டு படங்களை விரைவாக நடித்து முடித்தார் அஜித். 2006 -ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான பரமசிவன், பி.வாசு இயக்கம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்றியிருந்தது. தோல்வி அடையாமல் ஆவ்ரேஜாக தப்பித்தது. அடுத்து வந்த திருப்பதி விமர்சகர்களால் கழுவி ஊற்றப்பட்டாலும் வசூல் ரீதியில் கொஞ்சம் தப்பித்தது.
* வருமா? வராதா? என ஊசலாடிக்கொண்டிருந்த வரலாறு அதே ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி சரவெடியாக வெடித்தது. அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பாக எவ்வளவு கலாய்க்கப்பட்டது என்பதை ஒவ்வொரு அஜித் ரசிகனும் நன்கு அறிவான். அந்தக் காலகட்டம் அஜித் ரசிகர்கள் மறக்க நினைக்கும் கருப்பு நாட்கள்! தொலைக்காட்சிகளில் மட்டுமே 100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பான ட்ரைலர் என ஃபார்வர்ட் மெசெஜ்களாக வரும். தவிர, அந்தப் படத்தில் டான்ஸர் கதாபாத்திரத்தை முன்வைத்து அவரது ஆண்மை அதிகம் கேலி பேசப்பட்டது. இன்றைய தினத்தில் ஆன்லைனில் அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக இயங்க முக்கிய காரணம் பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கேலி பேச்சுகள்தான். வரலாறு இடைவேளைக் காட்சியில் சிகரெட்டைப் புகைத்தவாறு மூன்றாவது அஜித் வந்து நின்றபோதும்... தன்னைக் கொலை செய்ய வரும்போது வீல் சேரில் இருந்து எழுந்து நின்ற காட்சியின் போதும் ஆர்பரித்து நிமிர்ந்த ரசிகர்கள் இன்று வரை நிமிர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்! 2002 தீபாவளிக்கு வெளியான வில்லன் படத்துக்குப் பிறகு 2006 தீபாவளி அன்றுதான் மிகப்பெரிய வெற்றி கிடைக்கிறது எங்களுக்கு. பசியோடு காத்திருந்த எங்களுக்கு கிடா வெட்டு விருந்தே கிடைத்தது. ஆசை தீர கொண்டாடி தீர்த்தோம்.
* வரலாறு வெற்றிகரமாக பல அரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தபோதே 2007 பொங்கலுக்கு ஆழ்வார் வெளியாகி எங்களுக்கு அல்வா கொடுத்தது. அதே தினத்தில் போக்கிரி பட்டையைக் கிளப்பியது. மீண்டும் சோர்ந்து போனோம். ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் கிரீடம், பில்லா என அடுத்தடுத்த படங்களின் எதிர்பார்ப்பு கூடியது. பாக்ஸ் ஆஃபிஸில் சொதப்பவில்லை கிரீடம். பெரிய அளவில் வெற்றியும் இல்லை.
* 2007 - இன் இறுதி... பில்லா வெளியாகும் சமயம். சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி என எல்லாருக்கும் விஷேச பேட்டி தந்தார் அஜித். தனது வாழ்வில் மிக முக்கியமான படமாக கருதினார் பில்லாவை! பேட்டி மூலம் அவர் வெளிப்படுத்த விரும்பிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகளாக தனது தோல்விகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு பொறுமைகாத்த ரசிகர்களின் அன்புக்கு நன்றி!
ஆளே காலி எனும் நிலையில் இருந்து இன்றைய தினம் அவர் அடைந்திருக்கும் உச்ச நிலைக்கு மிக முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மட்டுமே! கூட இருந்த பலரும் லாவகமாக விலகியபோதும், துரோகம் இழைத்தபோதும் ரசிகர் பலத்தால் மட்டுமே மீண்டு வந்தார்.
ஒன்றை யோசித்துப் பார்ப்போம். தோல்விகளை மட்டுமே கொடுத்த நடிகன் ஒருவனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து அவனை வெற்றியாளனாக மீட்டெடுத்த ஓர் நற்காரியத்தைச் செய்துள்ளனர் அஜித் ரசிகர்கள்! ரசிகர்களால் அஜித் வாழ்கிறார். அவரது ஒரு படத்தினால் பல ஆயிரம் குடும்பங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. மட்டுமின்றி தன்னாலான தானமும் செய்கிறார்.
* பில்லா வெளியானது. ஸ்டைலிஷான மூவி மேக்கிங் என்றால் என்னவென்று இந்திய சினிமாக்களுக்கு ஒரு பாடமானது! அதற்கு முந்தைய ஆண்டு வெளியான ஷாருக்கானின் டான் படத்தின் மேக்கிங் கூட படு சாதாரணமாகவே இருக்கும். ரஜினி படத்தை ரீமேக் செய்தபோதிலும், அவரது ஸ்டைல் எதுவும் வந்து விடக்கூடாது என்று கவனமுடன் செயல்பட்டு, தனக்கான ஒரு ஸ்டைலை கண்டறிந்தார் தல. ( சமகால நடிகர்களில் பலர் அப்பட்டமாக ரஜினிகாந்தை இமிடேட் செய்வது கண்கூடு )
* பில்லா மூலம் மீண்டும் ஒருமுறை தலை நிமிர்ந்த அஜித் ரசிகர்களுக்கு ஏகன் ஒரு முட்டுக்கட்டையாய் வந்தது. இடையில் மீண்டும் கார் ரேஸ் ஆர்வம் துளிர்விட மறுபடியும் ஒரு கேரியர் விரிசல். 2008 தீபாவளிக்குப் பிறகு, 2010 ஃபிப்ரவரியில் அசல் வெளியானது. சிவாஜி ப்ரொடக்‌ஷன்ஸ், சரண் இயக்கம், இரட்டை வேடத்தில் அஜித் என மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடனும், மிகப்பெரிய ஓப்பனிங்குடன் வெளியானது அசல். எதிர்பார்ப்பு பொய்த்ததால் பாக்ஸ் ஆஃபிஸில் தோற்றது.
* கெளதம் வாசுதேவுடன் 50 -வது படம் என அறிவிப்பு வெளியாகி படம் ட்ராப் ஆனது. அசலுக்குப் பிறகும் இடைவெளி... என்ன பண்ண போகிறார் என காத்திருந்த ரசிகர்களுக்கு வெங்கட் பிரபுவுடன் மங்காத்தா என அறிவிப்பு வந்தது.
* தன்னைத் தக்க வைக்க மீண்டும் ஒரு வெற்றி அவசியம் எனும் சூழ்நிலையில், தனது கேரியரின் மிக முக்கியமான 50 -வது படம் வெளியாகும் முன்பு தனது ரசிகர் மன்றங்களை அதிகாரப்பூர்வமாக கலைத்து விட்டார். மன்றங்கள் மூலம் சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர் என்பதே முக்கிய காரணம். தனது ரசிகர்கள் எவரும், தனது பெயரை முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடாது ( அல்லது ) அரசியலில் ஏமாறக்கூடாது என்பதே அவர் விருப்பம்.
” நான் ஒரு நடிகன். எனது தொழில் சினிமாவில் நடிப்பது. அதை நான் செய்கிறேன். எனது படம் வெளியாகும் போது திரையரங்கிற்கு வந்து படத்தைப் பாருங்கள். பிடித்தால் ரசியுங்கள். கொண்டாடுங்கள். உங்களுக்குப் பிடிக்காவிட்டால் அடுத்தப் படத்தை உங்களுக்கு பிடிக்கும் படி பார்த்துக்கொள்கிறேன். இதுதான் நம் இருவருக்குமான தொடர்பு. மற்ற முழு நேரமும், உங்கள் குடும்பத்துக்காகவும், உங்கள் தொழிலுக்காவும் செலவிடுங்கள். நீங்களும் வாழுங்கள். மற்றவர்களையும் வாழ விடுங்கள்!”
2011 -ஆம் ஆண்டு அஜித்குமார் தனது ரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள் இது.
அஜித்தையும், அவரது ரசிகர்களையும் ஏளனப்படுத்துவோரிடம் எனது வினா ஒன்றுதான்... மேற்சொன்ன ஸ்டேட்மெண்டில் என்ன குறை கண்டீர்கள்? ஒரு நடிகனாக எவ்வளவு மெச்சூர்டான ஸ்டேட்மெண்ட் அது?
அவர் நடிக்கிறார். அவரை எங்களுக்குப் பிடிக்கும். நாங்கள் அதைக் கொண்டாடுகிறோம். அவ்ளோதான். சிம்பிள்.
மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்லிவிட்டே ரசிகர்களுக்காக மட்டுமே படம் நடிக்கிறார் அஜித்குமார். அவருக்காக மட்டுமே அவர் படங்களைப் பார்க்கிறோம் நாங்கள். எங்கள் இருவருக்குமான உணர்வுப்பூர்வமான புரிதல் இது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு நாள் முழுக்கவும் ஆட்டமிழக்காமல் ஷேவாக் நின்னு விளையாடினால் எவ்வளவு பரவசமாக பார்ப்போமோ அதை விட கூடுதலான பரவசம்தான் அஜித்குமாரை திரையில் பார்க்கும்போது!
ஆக...
ஆம். எங்களைத் திருப்தி படுத்த, எங்களுக்காக மட்டுமேதான் படம் நடிக்கிறார் அஜித். அவர் வேண்டுகோளுக்கிணங்க அவர் படங்கள் வெளிவரும் போது கொண்டாடித்தீர்ப்போம் நாங்கள்! கொண்டாட்டம் அதிகரிக்குமே தவிர இனி குறையாது! அந்த வகையில் அஜித்குமார் செய்திருப்பது மிகப்பெரிய புரட்சி. தனக்கென்று இருக்கும், தன்னை உச்சாணியில் வைத்த ரசிகர்களுக்காக மட்டுமே படம் எடுக்கும் ஒரு நடிகன்... அவனைக் கொண்டாட ஒரு ரசிகர் கூட்டம். உலகில் எந்த நடிகனுக்கு இது வாய்க்கும்? இது வரமல்லவா? வேறெந்த தனி மனிதனையும் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாக்காத வரமல்லவா...?
இந்தச் சமுதாயத்திற்காக எந்தவொரு சீரழிவையும் செய்யவில்லை நாங்கள். மாறாக, தாங்களாகவே முன்வந்து குழு குழுவாக பல்வேறு நலப்பணிகளை செய்துவருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
அஜித்தையும், அஜித் ரசிகர்களையும் ஏதோ சமுதாய சீரழிவாளர்கள் போல பார்க்கும் அன்பர்களிடம் சில கேள்வி... கத்தி படத்தில் பத்திரிகையாளர் ஒருவரிடம் விஜய் கேட்கும் கேள்வியைப் போலத்தான்!
வாழ்வில் எப்போதாவது மரக்கன்று நட்டுள்ளீர்களா?
தானாகவே முன்வந்து இரத்த தானம் செய்துள்ளீர்களா?
உங்கள் நண்பர்களுடன் இணைத்து எப்போதாவது ஒரு முறை அனாதை இல்லங்களுக்கோ, கண் பார்வையற்றவர்களுக்கோ உணவு வழங்கியிருக்கிறீர்களா?
மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து உங்கள் வீட்டிலும், சுற்றத்தாரிடமும் பேசியிருக்கிறீர்களா?
சாலையில் செல்லும்போது ஏதேனும் விபத்து நேர்ந்து அடிபட்ட ஒருவருக்கு சுற்றி இருப்போர் தயங்கியபடி வேடிக்கைப் பார்க்க முதல் ஆளாக ஓடி போய் உதவியிருக்கிறீர்களா?
எங்கு போனாலும் வரிசையில் நிற்பதை கடைப் பிடிக்க வேண்டும் என்பதை எப்போதுமே நினைவில் வைத்துள்ளீர்களா? அதை பலருக்கும் அறிவுறுத்தியிருக்கிறீர்களா?
பிரியாணி சமைத்து தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது கையால் பரிமாற வேண்டும் என்று தோன்றியிருக்கிறதா?
எந்த ஒரு அஜித் ரசிகனை கேட்டாலும் மேற்குறிப்பிட்டதில் மூன்று விஷயங்களையாவது கடைப்பிடிப்பான். வாழ்நாள் முழுக்க!
ஆர்பாட்டமின்றி தமிழக இளைஞர்களிடம் ஒரு கலாச்சார மாற்றத்தை செய்துகொண்டிருக்கிறார் அஜித்.
ஆண்களும் சமைக்க வேண்டும். குடும்பத்தினருக்கு உரிய அன்பையும், நேரத்தையும் செலவிட வேண்டும். சக மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். யாரையும் தரக்குறைவாக நடத்தக்கூடாது. வரிசையில் நிற்க வேண்டும். தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் வாழ்க்கையை அணுக வேண்டும். தோல்வியில் துவண்டு விட கூடாது. மனதில் சரி என தோன்றுவதை வெளிப்படையாக பேச வேண்டும். பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும். மூத்தோர்களை மதிக்க வேண்டும். எதிரிக்கும் உண்டான மதிப்பு அளிக்க வேண்டும்.
மிக மிக முக்கியமாக...
நன்றாக படிக்க வேண்டும். கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும். நாம் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விட வேண்டும்!
ஒவ்வொரு அஜித் ரசிகனுக்குள்ளும் இவை ஆழமாக பதிந்துள்ளன. அடுத்த தலைமுறையில் இக்கலாச்சார மாற்றத்தின் விதையை நிச்சயம் அறுவடை செய்வோம் நாம்!
இவை மட்டுமின்றி, தனது படங்களில் தவறான முன்னுதாரணங்கள் எவற்றையும் சொல்வதில்லை அஜித். வேதாளம் படத்தில் பெண்களுக்கான முன்னுரிமை, ஒரு ஆண் அவளுக்கு கொடுக்க வேண்டிய சுதந்திரம், என்னை அறிந்தால் படத்திலும் ஒரு ஆண்மகன் பெண்ணை அணுக வேண்டிய விதம், வீரம் படத்தில் தன்னைச் சுற்றி இருப்போரிடத்தில் நாம் செலுத்த வேண்டிய அன்பு, தான் நேசிக்கும் பெண்ணிடம் காண்பிக்க வேண்டிய கண்ணியம் என சில மெளனமான போதனைகளும் உண்டு.
பெண்களின் புட்டத்தை அமுக்குவது, அதன் மீது பந்து எறிவது, மார்புடன் மார்பு முட்டி கிளு கிளுப்பு உண்டாக்குவது, தெரியாத்தனமாக மார்பை அமுக்குவது, கேலிக்கும் கிண்டலுக்கும் பெண்ணை ஆளாக்கி தன் பின்னால் அலைய விடுவது... இதுபோல் சமகால ஹீரோக்கள் செய்யும் எதையும் செய்வதில்லை அஜித். மங்காத்தாவில் மட்டும் அவர் ஏற்று நடித்த நெகடிவ் பாத்திரம் காரணமாக விலைமாது கேரக்டரில் நடித்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டுவார். சுய லாபத்துக்காக ஒரு பெண்ணை காதலிப்பது போல நடித்து ஏமாற்றுவார்.
இவற்றைத் தவிர, கடந்த பல ஆண்டுகளாகவே வேறெந்தப் படத்திலும் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் அறவே கிடையாது. பாலியல் உணர்வுகளைத் தூண்டும் காட்சிகள் கிடையாது.
இதைவிட ஒரு நடிகன் தனது ரசிகர்களுக்காக என்னத்த செய்ய முடியும்? தனது படத்தில் எதைக் காண்பிக்க வேண்டும்?
இறுதியாக...
சொந்தம், பந்தம், நண்பர்கள் எல்லார்கிட்டயும் நல்லா பழகி அவங்களுக்கு உண்டான மரியாதையும் கொடுத்து, நாங்க வேலைக்கு போயி சம்பாதிச்சி குடும்பத்த காப்பாத்தி, எப்ப எங்க தல அஜித் படம் வருதோ அப்போ தியேட்டர் போயி அத கொண்டாடினால்... அது அஜித் ஹேட்டர்ஸ்க்கும் பிடிக்கல... நடுநிலைவாதிகளுக்கும் பிடிக்கல... ஃபேஸ்புக்குல எப்பவாவது எட்டிப் பார்க்கும் அரை குறைகளுக்கும் பிடிக்கல... அஜித்துன்னா யாருன்னே தெரியாத அல்லக்கைகளுக்கும் பிடிக்கல...
ஏண்டா... அஜித்குமார் சினிமாவுல நடிக்க கூடாதாடா?
அப்படி படம் நடிச்சிட்டா...
அந்தப் படத்த அஜித் ரசிகர்கள் கொண்டாடிட்டா...
அந்தப் படம் ஓரளவுக்கு பாக்ஸ் ஆஃபிஸ்ல கலெக்‌ஷன் பண்ணி எல்லாரையும் வாழ வச்சிட்டா...
உங்களால பொறுத்துக்க முடியாதாடா?
அஜித் நடிக்கற படங்கள் நீங்க எதிர்பாக்குற மாதிரி நல்ல படம் இல்லைதான்... ஆனால் கெட்ட படம் கிடையாது. அதுல விஷமத்தனமான கருத்துக்கள் கிடையாது...
சமுதாயத்த சீரழிக்கிற மாதிரி காட்சிகள் கிடையாது...
இப்படியெல்லாம் இருந்தாலும் உங்களால அத புரிஞ்சிக்க முடியாது இல்ல...?
அஜித் படத்தை நாங்க கொண்டாடுடுறதுதான் உங்க பிரச்சினைன்னா நாங்க அத கொண்டாடுவம்டா!
அந்தப் படம் வசூல் பண்றது உங்க பிரச்சினைன்னா போன படத்தை விட அடுத்த படம் அதிகம் வசூல் பண்ண வைப்போம்டா!
நீங்க எவ்வளவுக்கு எவ்ளோ அவர் மேல வெறுப்ப கொட்றீங்களோ அத விட ஆயிரம் மடங்கு அவர் மேல அன்பை நாங்க கொட்டுவோம்டா!
அவர் கோட் சூட் போட்டுன்னு நடந்து வர்ரது உங்க பிரச்சினைன்னா படம் முழுக்க அதையே பண்ணுவோம்டா... ஸ்டைலா... கெத்தா....
இதையெல்லாம் உங்களால பார்க்க முடியலைன்னா போய் ஆஃப்ரிக்க நாட்டு படங்களைப் பாருங்கடா!