Mar 17, 2014

ஏழு திரைப்படங்கள்



இது கதிர்வேலன் காதல் :


                                



’ஒரு கல் ஒரு கண்ணாடி’  திரைப்படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவின் அதீத நம்பிக்கையால் எடுக்கப்பட்ட படம் கதிர்வேலன் காதல். ஹீரோ அறிமுகத்தின்போது கோவிலில் சாமி கும்பிடுகிறார். அவரை இரண்டு பெண்கள் சைட் அடிக்கிறார்கள்…   “ ஆளு சூப்பரா இருக்காண்டி ” என இருவரும் சண்டைபோட்டு சைட் அடிக்கிறார்கள். அப்பவே தியேட்டர்காரன்கிட்ட சண்டைபோட்டு எகிறி குதிச்சி ஓடிடணும்னு நினைச்சேன்.

ஏன் சார் இப்படி? தமிழக மக்கள் பாவம் இல்லையா?

ஹீரோ நல்லவன். அவன் ரொம்ப ரொம்ப நல்லவனாகனும்னா, ஹீரோயின் கூட பழகனவன் ரொம்ப ரொம்ப கெட்டவனா இருக்கணும் எனும் பாக்கியராஜ் காலத்து கதை.
வழக்கம்போல சந்தானம் மட்டுமே ஒரே ஆறுதல். சந்தானத்தின் Continuity பயங்கரமாக மிஸ் ஆகிறது. வீரம் படத்திலும் இதே நிலைதான். கொஞ்சம் கவனியுங்கள் சந்தானம் சார்.

படத்தில் ஏகப்பட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகள். அத்தனையும் அறுவை. ஒரு கட்டத்தில் படத்தின் கதை என்ன? இப்போ நாம எங்க இருக்கிறோம்? என மயக்கம் தெளியாத அப்பாவிகளாக பார்வையாளர்கள் அலறுகிறார்கள். உதயநிதியின் அக்கா கணவராக வருபவர் ஆரம்பத்தில் தனது யதார்த்தமான பேச்சினால் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார். குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், நடனத்திலும் நடிப்பிலும் (!) முகப்பொலிவிலும் உதயநிதி ஸ்டாலினிடன் நல்லதொரு முன்னேற்றம் தெரிகிறது. ஆனாலும் அடுத்தப் படத்தின் கதையைக் கொஞ்சம் கவனமாக தேர்ந்தெடுங்க பாஸ்…

குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரவழைத்ததில் இயக்குனரும், உதயநிதியும் வெற்றிபெறுகிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் பெட்டர் லக் (அட்லீஸ்ட்) நெக்ஸ்ட் டைம்.
நயன்தாரா வழக்கம்போல செம்ம!



ஆஹா கல்யாணம் :



                                


இரண்டு பேர் சேர்ந்து ஒரு தொழில் தொடங்குகிறார்கள். வெற்றிபெறுகிறார்கள். பின்னர் ஈகோ காரணமாக இருவரும் பிரிகிறார்கள். தனித்தனியே தொழில் செய்து பெரும் நஷ்டமடைகிறார்கள்.  இருவரும் மீண்டும் இணைந்தே தீர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியில் வெற்றிபெறுகிறார்கள். ரொம்பப் பழைய கதை. ஆனால் பனிக்கால செர்ரி பழம் போல அவ்வளவு ஃப்ரஷ், யூத் ஃபுல், ரொமாண்டிக், கலர் ஃபுல்.

படத்தில் எல்லாமே பாஸிட்டாவாக நடக்கிறது. விக்ரமன் படம் போல. நமக்கும் சந்தோஷமாக இருக்கிறது. நானி பேசும் தெலுங்குத்தமிழை அவரது நண்பர் கலாய்க்கும்போது தியேட்டர் கலகலக்கிறது. நானியின் டயலாக் டெலிவரியும், பாடி லாங்க்வேஜ்-ம் ரசிக்க வைக்கிறது. “ நான் ஈ ” படத்திலும் இதே லாங்குவேஜ் தான். அதில் கொஞ்ச நேரமே வந்ததால் அந்தப் படத்தில் அலுப்புத் தட்டவில்லை. ஆனால் அடுத்தப் படத்தில் ஓரங்கட்டிவிடுவார்கள் ரசிகர்கள். உஷார் நானி. க்ளைமாக்ஸ் காட்சிகளில் அவர் பேசும் வசனங்களும், பர்ஃபாமன்ஸும் அப்ளாஸ் அள்ளுகிறது.

அடுத்து கதாநாயகி வாணிகபூர். சமந்தாவும், அனுஷ்கா சர்மாவும், காத்ரினா கைஃப்-பும்  சேர்ந்து செய்த கலவையாக ஜொலிக்கிறார். இவரை புதுமுகம் என்றே யாரும் சொல்லமாட்டர்கள். இவர் போட்ட குத்தாட்டத்தைப் போல சமீப கால நடிகை எவருமே போட்டதில்லை. எனர்ஜிட்டிக்காக இருக்கிறார். ஸ்க்ரீனில் இவரை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கலாம் என ஏங்க வைக்கிறார். முக அசைவுகளும், டயலாக் டெலிவரியும், கண்களின் குறுகுறுப்பும்… அடடா… கொள்ளை அழகு!

அம்மணி நடிப்பில் காட்டிய திறமையும் கூட சமீப கால நடிகை எவருமே காட்டாதது. குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகள். ஒரு நாயகி, நாயகனுடன் ஈடுபடும் ரொமான்ஸ் காட்சிகளில் ஒரு ஃபீல் இருக்க வேண்டும். கண்களில் காதல் கொப்பளிக்க வேண்டும். முகத்தில் பூரிப்பு தெறிக்க வேண்டும். உதட்டில் புன்னகை மலர வேண்டும். இதை நம்ம ஆளுங்க கெமிஸ்ட்ரி என்பார்கள். ஜஸ்ட் லைக் தட் வாணிகபூர் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார். ஐ’யெம் இம்ப்ரஸ்ட்…


                                 


அடுத்து, வாணிகபூருக்கு டப்பிங் பேசிய டப்பிங் ஆர்ட்டிஸ்ட்-ஐயும் குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும். பெரும்பாலான நடிகைகள் பேசும்போது வாய் ஒரு கோணலாகவும், டயலாக் இன்னொரு கோணலாகவும் இருக்கும். வாணிக்கு டப்பிங் கொடுத்த பெண்மணியும் கலக்கியிருக்கிறார்.

ஃபீல் குட் மூவி பார்க்கவிரும்புகிறவர்கள் ஒருமுறைப் பார்க்கலாம்… வாணிக்கபூருக்காக மட்டுமே! ஒளிப்பதிவு ஜில்ஜில். மழையின் சாரலில் எனும் ஒரு பாடல் போதும் இந்தப் படத்தின் இசையை ரசிப்பதற்கு.
சிம்ரன் சிறிய கதாபாத்திரமொன்றில் வருகிறார். பரிதாபமாக காட்சியளிக்கிறது அவரது தோற்றம். “ சேலையில வீடு கட்டவா? ” என சிலாகிக்க வைத்த சிம்ரன், கரை ஒதுங்கிய கட்டுமரம் போல நிலைகுலைந்து போயிருக்கிறார். ஏன் இத்தனை முதிர்ச்சி? மேரேஜ் ப்ளானிங்கில் சிம்ரன் சூப்பர் ஸ்டாரைப் போன்றவர் என்கிறார்கள். ஆனால் சிம்ரன் பண்ணுவதெல்லாம் ஃப்ராடு வேலை. தொழில் தர்மம் இல்லாதவராக காண்பிக்கப்படுகிறது. இரண்டுக்கும் என்ன லாஜிக் என்று புரியவில்லை :-)





த்ரிஷ்யம் : ( மலையாளம் )



                          



இது காமன்மேன்களின் வெற்றி. கேரளாவில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. வசூலில் ரெக்கார்டுகள் தேய்ந்துக்கொண்டிருக்கின்றன, சென்னையிலும் 10 வாரங்களைக் கடந்து இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் இதுவரை பார்த்த யதார்த்த சினிமாக்களில் திருவாளர் பொதுஜனங்களில் ஒருவனான நாயகனுக்கோ அல்லது அவனது குடும்பத்தில் எவரேனும் ஒருவருக்கோ அநீதி இழைக்கப்பட்டிருக்கும். அதை எதிர்த்துப் போராடுவான் நாயகன். அரசாங்கத்தையும், ஆளும் வர்க்கத்தையும் அவனால் கடைசிவரை எதிர்த்து நிற்க முடியாது. இறுதியில் சட்டத்தை தன் கையில் எடுப்பான். யதார்த்தமாக சண்டையிட்டு எதிரியைக் கொல்வான். இல்லையெனில்  நீதி கிடைக்காமலேயே சோகத்துடன் படம் நிறைவுபெறும்.

ஆனால், த்ரிஷ்யத்தில் இது எதுவுமே இல்லை. மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட திரைக்கதை சாதாரணக் கதையைக் கொண்டாட வைத்திருக்கிறது. அரசாங்கத்தையும், அடக்குமுறைகளையும் சாதாரண குடிமகன் எதிர்கொண்டு, தனது மதி கூர்மையால் எவ்வாறு வெற்றிபெறுகிறான் என்பதே திரைக்கதை. இந்த பாஸிட்டிவ் அப்ரோச் காரணமாகவே படம் பிச்சிட்டு போகுது! அதிலும் அவனது மதிகூர்மைக்கு முக்கிய காரணமாக அவன் பார்த்த திரைப்படங்கள் தான் காரணம் என காண்பிக்கப்படுகிறது. இதை படம் பார்க்கும் காமன் மேனும் தன்னுடன் ஒன்றிப் பார்க்கிறான்.

இதுவரை இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள். இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான இந்திய மொழித் திரைப்படம் இது. நேட்டிவிட்டியுடன் கூடிய யதார்த்த நாயகனாக மோகன்லாலுக்கு இணையாக தமிழில் ஒருவரைக் கூட கற்பனைச் செய்ய முடியவில்லை என்பது கொஞ்சம் வருத்தமளிக்கிறது!



வல்லினம் :



                              


கிரிக்கெட்டு… கிரிக்கெட்டு… கிரிக்கெட்டுன்னு எல்லாரும் கெட்டு போறீங்களே… அதைத்தாண்டி இந்தியாவில் நிறைய விளையாட்டுகள் இருக்கு. அதையும்கொஞ்சம் கண்டுகொள்ளுங்கள். கண்டுகொள்ளாவிட்டாலும் கவலையில்லை, ஆனால் ஏளனம் செய்யாதீர்கள் என வலியுறுத்தும் கதைக்களனுக்காகவே இயக்குனரை முதலில் பாராட்டிவிடலாம்.

சில கேள்விகள் இருக்கு. இது எனது தனிப்பட்ட கேள்விகள் மட்டுமே.
முதல் விஷயம், இந்தப் படத்துக்கு காதல் அவசியமா? ஈரம் போன்ற சமரசமில்லாத படத்தைக் கொடுத்த இயக்குனர், ஏன் இந்தப் படத்தில் இவ்வளவு சமரசங்கள் செய்துகொண்டார். என்னைப் பொறுத்தவரையில் ஈரத்தில் ஏறிய கிராஃப், அதே வேகத்தில் இந்த படம் மூலம் இறங்கிவிட்டது. இதே genre –இல் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த லகானில் காதல் இருக்கும். ஆனால் நாயகனும் நாயகியும் புதியதாக சந்தித்து உயிரற்ற காதல் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டு காதல் வளர்ப்பதைப்போன்ற காட்சிகள் இல்லை. லகானில், காணும் காதலானது   நாயகனை மோட்டிவேட் செய்யும்.

                                  


இன்னொரு படத்தைப் பார்ப்போம். “ரொமாண்டிக்” புகழ் ஷாருக்கானின்      ‘சக்தே இண்டியா’. இதில் நாயகியே கிடையாது. ஷாருக்கானுக்கு ஒரு பாடல் கூட கிடையாது. பட்டி தொட்டியெங்கும் படம் ஹிட்.

                            


அடுத்து,  ‘ பாஹ் மில்க்கா பாஹ் ’ .

                               


                                 
ஃபரான் அக்தருக்கும் சோனம் கபூருக்கும் இடையில் மிக மெல்லிய காதல் படத்தின் இடையில் வந்து செல்லும். கவிதையைப்போல காட்சிப்பட்டிருக்கும். ஒரே ஒரு பாடல்… உள்ளம் கொள்ளைப் போகும் அதன் இசையில்! அந்தப் பத்து நிமிடங்களைத் தவிர படத்தில் காதல் காட்சிகளே கிடையாது. இதெல்லாம் காதல் இன்றி பட்டையைக் கிளப்பிய விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள். ஆனால் வல்லினத்தில் ஏன் சாத்தியப்படவில்லை? காதல் காட்சிகளையும், பாடல்களுக்கான lead காட்சிகளையும் கண்டு ரசிகர்கள் கதறி அழுகிறார்கள்.


                   

அடுத்து கதாநாயகி. உடன் இருக்கும் தோழியே லட்சணமாக இருக்கிறாரே… நாயகி தேர்வில் ஏன் இத்தனை அலட்சியம்? ஒரு தோழிக்கு, வயிற்று வலி மாத்திரை வாங்கிக்கொடுத்தால், அதனைப் பார்க்கும் மற்றொரு தோழிக்கு நாயகன் மீது காதல் வருகிறது. உங்களிடம் இருந்து இதுபோன்றதொரு காட்சியை எதிர்பார்க்கவில்லை அறிவழகன் சார்.

                              



                                                                         

தவிர, விளையாட்டுப்போட்டிகளில் அவர்களில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் முனைப்பை தெளிவாக காண்பிக்கவேயில்லை. வெறும் வசனங்களும், பார்வை மோதல்களும் மட்டுமே! நான் குறிப்பிட்ட மூன்று ஹிந்தி திரைப்படங்களிலும் வெற்றிக்காக காண்பிக்கப்பட்ட முனைப்பு இதில் இல்லை. ரசிகர்களால் வெற்றியை  குதுகளிக்கமுடியவில்லை.

கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய திரைப்படம் . கதாநாயகியாலும், காதல் மற்றும் டூயட் காட்சிகளாலும் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது.
ஈரம் படத்தில் ரசிக்க வைத்த, சோர்வைடைச் செய்யாத திரைக்கதை மேஜிக் இதில் இல்லை. இயக்குனரின் தடுமாற்றமும், சமரசமும் நன்கு தெரிகிறது.  
நகுல் மட்டும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார்.



300 Rise of an empire ( 3D ) :


                            


                                                                                                                                                                                                                                                                                                             

300  படத்தின் அடுத்த பாகம். கதைப்படி, முந்தைய பாகத்திற்கு முன்னர் நடக்கும் சில சம்பவங்களும், ஸ்பார்ட்டன்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்த அதே சமயத்தில் பெர்சிய கடற்படையுடன் ஏதென்ஸ் நாட்டினர் போரிட்ட சம்பங்களும் தான் இந்தப் படத்தின் கதை. மேக்கிங் மற்றும் 3D அனுபவத்திற்காக ஒருமுறைப் பார்க்கலாம். முழுப்படமும் ரத்தமும், போர்க்களமும் தான்! க்ரேக்கர்கள் மிகச்சிறந்தப் போர் வீர்ர்கள் என்பதை மீண்டும் ஒரு உணரலாம். அடுத்தபாகம் இன்னும் கொடூரமான போர்க்களமாக இருக்குமென நினைக்கிறேன்.
ட்ரீமர்ஸ் படத்தில் ரொமான்ஸில் கலக்கிய ஈவா க்ரீன், இந்தப் படத்தில் ஆக்‌ஷனில் பின்னி பெடல் எடுக்கிறார். பார்வையாலேயே மிரட்டுகிறார். அவரது கண்கள்..... அடடா...!

                              


க்ரேக்க வரலாற்றை அறிய விரும்புகிறவர்கள் கருந்தேளின் இந்த விமர்சனத்தையும் வாசித்து விடுங்கள்.






ஆதியும் அந்தமும் :


                                


நான் கலர் கரெக்‌ஷன் செய்த படம். அதனால் எந்த மாதிரியான டிட் பிட்ஸ் கொடுப்பதென தெரியவில்லை. முதல் பாதி அட்டகாசமான த்ரில்லர். இரண்டாம் பாதி வழக்கமான ஃப்ளாஷ்பேக் காதல், செண்டிமெண்ட். பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமையும், அதன் மூலம் தனிப்பட்ட ஒரு குடும்பம் அடையும் பாதிப்பையும், கருணைக் கொலையையும் வலியுறுத்துகிறது. வல்லினம் போலவே, இந்தப் படத்திலும் இரண்டாம் பாதியில் வரும் காதல் காட்சிகளும், கதாநாயகியும் ரசிகர்களின் பொறுமையைப் பெரிதும் சோதிக்கின்றன. த்ரில்லர் படங்களுக்கு ஒளிப்பதிவும் இசையும் சேர்ந்து கைகொடுக்க வேண்டும். ஒளிப்பதிவு க்ளாஸ். இசை இந்தப் படத்திற்கு பர்ஃபெக்ட். ஆனால் பாடல்களைத் தவிர்த்திருக்கலாம். ரெண்டு ஸ்டேட் தள்ளியிருக்கும் மும்பையில் எடுக்கப்படும் எண்ணற்ற இந்திப் படங்களும், மராத்தி படங்களும் பாடல்களே இல்லாமல் பெரும் கவனம் பெறுகின்றன. இந்த நிலை தமிழுக்கும் வர வேண்டும். தமிழ் ரசிகர்கள் நிச்சம் ஆதரவு கொடுப்பார்கள்.




ஆயிரத்தில் ஒருவன் :


                              


புரட்சித்தலைவரும்
புரட்சித்தலைவியும் முதன்முதலாக இணைந்து நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன்

சாந்தம் அரங்கம் நிரம்பி வழிந்தது. எம்.ஜி.ஆர் பக்தர்கள் அறக்கட்டளையை சேர்ந்த பலர் நின்றுக்கொண்டே படம் பார்த்தனர். ஐம்பதைக் கடந்த நிறைய பேர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர்.
படம் துவங்கிய சிறிது நேரத்தில் ஒரு கும்பல் உள்ளே நுழைந்து அனைவருக்கும் ‘5 ஸ்டார்சாக்லேட் கொடுத்தனர். ஏனெனெ விசாரித்தால்,

இது சந்தோஷமான மூமெண்ட் சார்... நீங்க எல்லாரும் தலைவர் படம் பார்க்க வந்திருக்கீங்க... சந்தோஷத்தைக் கொண்டாடத்தான் இந்த ஸ்வீட்என சந்தோஷமாக கொடுத்துச் சென்றனர்.

படத்தின் வசனங்களும், பாடல்களும் தாறுமாறு...
ஒவ்வொரு பாடலையும் ஒன்ஸ்மோர் கேட்டு அரங்கை அதிரச்செய்தனர் 50+ ரசிகர்கள்.  புரட்சித்தலைவியின் காதல் சொட்டும் பார்வைக்கும், வசனங்களுக்கும் கூடுதல் பூரிப்பில் ஆரவாரப்படுத்தினர்.

எம்.ஜி.ஆர் படமொன்றை திரையில் பார்ப்பது இதுதான் முதல்முறை. அவர் ஏன் கடவுளாக இன்றளவும் கொண்டாடப்படுகிறார் என்பதை உணர முடிந்தது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒளி/ஒலி இரண்டும் புதுப்பிக்கப்பட்டு மிளிர்ந்து வீறுநடை போடுகிறார் ஆயிரத்தில் ஒருவன்.

டிஜிட்டல் என்பதை சுருங்கக்கூறின், பழைய நெகட்டிவை ஸ்கேன் செய்து அதிலுள்ள scratch, dust , pinholes போன்றவற்றை ஒவ்வொரு ஃப்ரேமாக துல்லியமாக நீக்குவதாகும். பின்னர் நவீன தொழில்நுட்பத்துடன் அதற்குண்டான வண்ணங்களைக் கொடுக்கவேண்டும்.
இது ஒரு நல்ல முயற்சி. படத்தை வெளியீடு செய்த நிறுவனமும், டெக்னிக்கல் பங்களிப்பை அளித்த பிரசாத் நிறுவனமும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்!

சினிமாப் பிரியர்கள் அனைவரும் அவசியம் காணவேண்டிய சித்திரம் இந்த லேட்ட்ஸ்ட்ஆயிரத்தில் ஒருவன்

Dec 2, 2013

சிந்தனையைத் தூண்டிய எழுத்து!

இமயமலைப் பயணத்தின் அனுபவங்களை ஓரளவிற்கேனும் நம்பகத்தன்மையுடனும் சுவாரஸ்யமாகவும் நண்பர்களுக்கு பகிர வேண்டும் எனும் நோக்கில் தான் “ப்ளாக்”-ல் விளையாட்டாக எழுத ஆரம்பித்தேன். ஆனால் சற்றும் எதிர்பாரா வண்ணம் சாரு ஆன்லைனில் லிங்க் கொடுத்து எனது பொறுப்புகளை இன்னும் கூடுதலாக்கிவிட்டார் சாரு.


பயணத்தின் அனுபவங்களை எழுதுமாறு என்னைத்தூண்டியதும் சாருவின் எழுத்துதான். சமீபத்திய சந்திப்பின்போது,

“ சாருவின் எழுத்து வாசகனை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கின்றது. வாசகனுக்கு முன்பாக பல வாசல்களைத் திறந்துவிடுகின்றது... ”

- என்று சிலாகித்து கூறினார் அராத்து. தனது தற்கொலைக் குறுங்கதைகளைப் பற்றின பேச்சினூடே , அதன்  ஆரம்பப்புள்ளி சாருவின் எழுத்திலிருந்து துவங்கியதைப் பற்றியும் விவரித்தார். அதுமட்டுமின்றி எழுத்தானது, வாசிப்பவனின் சிந்தனைகளை ஒரு கட்டுக்குள் அடக்கிவிடாமல் சுதந்திரமாக சிந்திக்க தூண்டுவதாகவும், தனக்கான பாதையினை நோக்கி இயங்க வைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டுமென சாருவும் அராத்துவும் ஒருசேர குறிப்பிட்டனர்!

கொஞ்சம் யோசித்துப் பார்த்த பின்புதான், இந்தப் பயணத்தைப் பற்றி என்னை எழுதத்தூண்டிய/ பயணத்தைக் குறித்த சிந்தனைகளைத் தூண்டியதும் எப்பொழுதோ படித்த  ( கடந்த வருடம் )  சாருவின்  எழுத்தும் விவரிப்பும் தான் என்பதை புரிந்துகொண்டேன்!

இதோ... அந்த சிந்தனையைத் தூண்டிய எழுத்து உங்கள் பார்வைக்கும்...






(  “ ராஸ லீலா ”- கண்ணாயிரம் பெருமாளின் கதை 11-ல் )



மேட்டூரில் காலை ஏழரை மணிக்கு இருக்க வேண்டும் என்பது திட்டம்; ஆனால், கூட வந்த ஒரு நண்பனின் ‘ ஆசனவாய்த் தொந்தரவினால் ’ சேலத்திலிருந்து கிளம்பும்போதே ஒரு மணி நேரம் தாமதம். மேட்டூர் போய்ச் சேர்ந்தபோது மணி பத்து. ஏழரையை உத்தேசித்து, மேட்டூர் பொதுப்பணித் துறையினர் தயாரித்து வைத்திருந்த இட்லி, தோசை, மீன் குழம்பு, மீன் வருவல் , கோழிக் குழம்பு எல்லாம் ஆறி ஜில்லிட்டுப்போயிருந்தன. ஆறின கஞ்சி பழங்கஞ்சி. தோசையெல்லாம் வறட்டு வறட்டென்று காய்ந்துபோயிருந்தது. ஆனால் மீன் வறுவல் ஆறிப்போயும் ருசியாக இருந்தது. காவிரியிலிருந்து பிடித்து அப்படியே சமைத்தது. ஐஸில் வைக்கப்பட்ட சென்னை மீனுக்கும் இதற்கும்தான் எத்தனை வித்தியாசம். இதைச் சுடச்சுட சாப்பிட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ‘ ஆசனவாய்ப் பிரச்சனை ’ நண்பரைச் சபித்துக்கொண்டே சாப்பிட்டான் பெருமாள்.

மீனின் பெயர் கேட்டான்… ‘Rogue’ என்றார்கள். வெறும் பெயரல்ல, காரணப் பெயர். ரவுடித்தனமாக மற்ற சிறிய மீன்களைப் பிடித்து சாப்பிட்டுவிடும் என்பதால் இந்தப் பெயர்.

பாவம் சங்கரா மீன். எவ்வளவு பெரிய மீனாக இருந்தாலும் சங்கரா மீன் அது பாட்டுக்கு சிவனே என்று கடலில் கிடக்கும். எந்த சக மீன்களுக்கும் எந்த இடைஞ்சலையும் தராது. அப்படிப்பட்ட அப்பாவி மீனுக்கா சங்கரா மீன் என்று பெயர் வைக்க வேண்டும்?  இந்த ‘ரோக்’ மீனுக்கல்லவா அந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும்? ஆனால் ரோக் மீன் ருசியில் கிட்டத்தட்ட trout மீனைப் போல் இருந்தது. Trout மீனுக்குத் தமிழ் வார்த்தை இல்லை. நன்னீர் மீன் என்று சொல்லலாம். ஸ்படிகம் போன்ற தூய்மையான தண்ணீரில் வளர்க்கப்படும் மீன். காஷ்மீரில் சாப்பிட்டிருக்கின்றான் பெருமாள். அதற்குப் பிறகு அதை உண்ணும் சந்தர்ப்பம் வரவில்லை.

மேட்டூரிலிருந்து ஹொகனேக்கலுக்கு 1942-ல் தயாரிக்கப்பட்ட ஒரு விசைப்படகில் கிளம்பினார்கள். டீசலில் இயங்கும் படகு அது. மணி 10.30.  ஐந்து மணி நேரப் பயணம். அதுவும், நதியின் போக்குக்கு எதிர்த்திசையில். படகுக்குள் சென்றதுமே காலணிகளைக் கழற்றிவிட்டான் பெருமாள். காலணிகளோடு நீச்சல் அடிப்பது கடினம். சுற்றிவரப் பார்த்தான். சமுத்திரத்தைப் போல் கண்காணாதவரை நிறைந்திருந்தது காவிரி. கரையே தெரியவில்லை. அவனுக்கு நீச்சல் தெரியும்தான். ஆனால் இவ்வளவு தூரத்தையும் கடக்க அவன் இன்றும் நீச்சல் காளி இல்லையே?

நீச்சல் காளியை அவன் தனிஷ்கோடியில் சந்தித்தான். தனுஷ்கோடியிலிருந்து ஸ்ரீலங்காவின் தலைமன்னார் வரை – 40 கி.மீ தூரம் – வெகு அனாயாசமாக நீந்திக்கடந்துக்கொண்டிருந்தவர் அவர்.   தனுஷ்கோடியில் குதித்து, 12 இலிருந்து 14 மணி நேரம் இடைவிடாமல் நீந்தி தலைமன்னார் சேர்ந்து, அங்கு இரண்டு மூன்று நாட்கள் இருந்துவிட்டு, மறுபடியும் நீந்தி தனுஷ்கோடி வந்து சேருவாராம். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. சமீபத்தில் கூட ப்யூலா செளத்ரி என்ற நீச்சல் வீராங்கனை தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்தியிருக்கின்றார். ஜிப்ரால்டர்  ஜலசந்தியைக் கூட நீந்திக் கடந்தவர் இந்த ப்யூலா. ஆனால் இதுபோன்ற நீச்சல் வீரர்களுக்கும், நீச்சல் காளிக்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் உள்ளது. நீச்சல் வீரர்களோடு கூடவே பாதுகாப்புக்காக விசைப்படகுகளில் ஆட்கள் செல்வார்கள். மின்விளக்கு வசதி, வழிகாட்டுவதற்கு ‘கைட்’ போன்ற எல்லா வசதியும் உண்டும். அதோடு, தண்ணீரிலேயே நீண்டநேரம் இருப்பதால் உடம்பில் சுளுக்கு, பிடிப்பு எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க உடம்பு பூராவும் ‘க்ரீம்’ தடவிக்கொள்வார்கள் நீச்சல் வீரர்கள். இது எல்லாவற்றையும்விட அவர்களுக்குள்ள அதிமுக்கிய வசதி என்னவென்றால், நீந்தமுடியவில்லையென்றால் நீச்சலை ரத்து செய்துவிட்டு படகில் ஏறி அமரலாம். ஆனால் நீச்சல் களிக்கு இதுபோன்ற வசதிகள் ஏதும் கிடையாது. களைப்பு ஏற்பட்டாலும் நீச்சலை நிறுத்த முடியாது, நிறுத்தினால் மரணம். மூச்சைப் பிடித்துக்கொண்டு தலைமன்னார் வரை நீந்தியே ஆக வேண்டும்; ஒற்றை ஆளாக… 40 கி.மீ… 14 மணி நேரம்…

“ வழியில் திமிங்கலம் போன்ற கடல் மிருகங்களால் ஆபத்து ஏற்படாதா? ” என்று அவரைச் சந்தித்தபோது கேட்டான் பெருமாள்.

“ அதெல்லாம் நிலத்தில் உள்ளவர்களின் கேள்வி தம்பி… அதுங்க பாட்டுக்கு அதுங்க வேலயப் பாத்துக்கிட்டு போவும். நம்மள அண்டாது…” என்றார் சிரித்துக்கொண்டே. பெரும் கானகங்களில் மூர்க்க விலங்குகளோடு வாழும் துறவிகளின் பதிலைப் போலிருந்தது நீச்சல் காளியின் பதில். இதில் ‘ மூர்க்க விலங்குகள் ’ என்ற பதமே பெருமாளைப் போன்ற சராசரிகளினுடையது.

மிஞ்சிப் போனால் அந்தக் காவிரியில் ஒரு மணிநேரம் நீந்தலாம் என்று நினைத்துக்கொண்டான். ம்ஹூம்… அதற்கும் வாய்ப்பில்லை. கூட வந்தவர்களுக்கு நீச்சல் தெரியாதாம்.

” பெருமாள், என்னை நீ காப்பாற்றாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன் ” என்றான் நரேன். அந்த வாக்கியத்தில் இருந்த இலக்கணப் பிழையை எண்ணி ரசித்தான் பெருமாள்.

ஆனால் பாலு down to earth மனிதன். நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

“ தோ பார். கரய வுட்டுக் கெளம்பி வர அர அவ்ர்தான் ஆவுது. பேசாம படகத் திருப்பிடுவோம். பை ரோட் போய்க்கலாம்… எனக்கு நீச்சல் தெரியும். ஆனா ஒன் அவர்தான் நீஞ்ச முடியும். அதுக்கே வாய்ல நுரை தள்ளும்…”

ஆனல இதெல்லாம் வெற்று பயம் என்று தெரிந்தது. காரணம் படகின் மேலேயே ஒரு பரிசல் இருந்தது.

இருந்தாலும் அந்த ஐந்து மணி நேரப் பயணத்தில் பெருமாள் மது அருந்தவில்லை. போதையுடன் நீச்சல் அடிக்க முடியாதே!

நதியின் நீரோட்டம் வாலைக்குமரி ஒருத்தியின் திமிறும் உடற்கட்டை ஞாபகப்படுத்தியது. காமவுணர்வை வெகுவாகத் தூண்டும் காட்சியாக இருந்தது.

மரண பயம்… காம உணர்வு… திரும்பவும் Georges Bataille இன் தத்துவார்த்தப் பிரச்சனைக்கு வந்து சேர்ந்துவிட்டோம். மரணம் – காமம் – மரணம் – ஜனனம்… இது ஒரி வட்டச் சுழற்சி எனத் தோன்றியது.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்தான் பாலு. அவன் பேச்சை யாரும் கேட்கவில்லை. ஆசாமி தூங்கிவிட்டான். தூக்கமும் ஒருவகையில் மரணம்தானே? ஆனால் ஒரு நிச்சயம் இருக்கிறது, ‘ எழுந்துவிடுவோம் ’ என்று. மரணத்தில் அப்படியில்லை, மறுபிறவி பற்றி அவ்வளவு நிச்சயமில்லை. ‘ பிறவாதிருத்தல் வேண்டும்…’ எல்லா ஞானிகளும் இதையேதான் சொல்கிறார்கள். பிறவாமை வேண்டும்… பிறவித் துன்பம்… மனித வாழ்க்கை அவ்வளவு துயரகரமானதா என்ன?

பாலு விழித்துக்கொண்டுவிட்டான். மேட்டூரிலிருந்து கிளம்பி மூன்று மணிநேரம் ஆகியிருக்கும். இப்போது பெருமாளுக்கு பயம் நீங்கிவிட்டது. காரணம், காவிரி அங்கே குறுகியிருந்தது. கரையில் ஓரிரு குடிசைகள் தெரிந்தன. ஒரு குடிசையிலிருந்து மற்றொரு குடிசைக்கு இரண்டு கி.மீ தூரமாவது இருக்கும். குடிசைக்குப் பக்கத்தில் ஒன்றிரண்டு ஆடுமாடுகள். வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தார்கள். படகின் முன்பக்கம் நரேன் இருந்தான். பெருமாளும், பாலுவும் வால் பகுதியில். அப்போது… கரையில் ஒரு குடிசை… குடிசையின் வாசலில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். அக்கம்பக்கம் கண்ணுக்கெட்டிய தூரம் யாருமில்லை. மின்சாரம் இல்லை, தொலைக்காட்சி இல்லை, புத்தகங்கள் இல்லை. அந்தப் பெண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா என்பது சந்தேகமே.

அவள் அமர்ந்திருந்தது ஒரு ஓவியத்தைப் போல் இருந்தது. ஒரு சிறிய பாறையில் அமர்ந்து கன்னத்தில் கைவத்தபடி எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் எதையும் பார்க்கவில்லை. சூன்யத்தில் நிலைத்திருந்தது அவள் பார்வை. அவள் மனதில் இப்போது எதைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பாள்?

திடீரென்று பாலி அந்தப் பெண்ணைப் பார்த்து கையசைத்தான்., அந்தப் பெண்ணும் அதைக் கவனித்துவிட்டாள். அவள் கண்களில் ஒரு மின்னல் பொறி. இவர்கள் சற்றும் எதிர்பாராத வண்ணம் சட்டென்று அவளும் பாலுவைப் பார்த்து கையசைத்தாள். ( இதைப் பற்றி பாலு பின்னர் விவரிக்கும்போது, “அவள் ஒன்றும் உடனே கையசைத்துவிடவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்து aim பண்ணி, நல்ல பர்ஸனான்னு பார்த்துத்தான் கையசைத்தாள் ” என்றான். ) ஆனால், என்ன ஒரு கொடுமை… அவளுக்கும் படகுக்கும் நடுவே ஒரு குன்று வந்து குறுக்கிட்டது. அவளை மீண்டும் பார்க்க முடியுமா என இவர்கள் மனம் பதற்றம் கொண்டது.

நல்லவேளை… படகு ஓரிரு நிமிடங்களில் அந்தக் குன்றைச் சுற்றி வந்தபோது மீண்டும் அவள் தெரிந்தாள். அதற்குள் அவள் வேறு ஓர் இடத்திற்கு ஓடி வந்திருந்தாள். இப்போது பாலு தாமதிக்கவில்லை, உடனே கொடுத்தான் ஒரு பறக்கும் முத்தம்.

என்னடா இது வாழ்க்கை. அதை என்னவென்று சொல்வது? அவளும் கொடுத்துவிட்டாள் ஒரு பறக்கும் முத்தம்.

கிட்டத்தட்ட ஒரு பரவச நிலையில் இருப்பவளைப் போலிருந்தாள் அவள். காலங்காலமாக மனித முகத்தையே பார்த்திராதவளைப் போலிருந்தது அவளது பரவசம். ஒருவேளை இப்படி ஒரு விசைப்படகை இப்போதுதான் பார்க்கிறாள் போலும்.

அவளுடைய அடுத்த கட்ட நடவடிக்கைதான் இன்னும் ஆச்சர்யமானது. தான் இருந்த இடத்தை விட்டு படகு தன் பார்வையை விட்டு மறையாதவாறு ஓடி வந்தபடியே கையினால் ’ வா, வா ’என்று பாலுவை நோக்கி சைகை காண்பித்தாள். அவளது உடல் அசைவுகள் அவளது பதற்றத்தையும், ஆர்வத்தையும், தனிமையின் துயரத்தையும், அத்தனிமையிலிருந்து விடுபட்டு மனித முகங்களைக் கண்ட வெறி கொண்ட சந்தோஷத்தையும் கலந்த அந்த அபூர்வம் – அந்தக் கொந்தளிப்பு இன்னும் ஓரிரு கணங்களில் தன்னை விட்டுப் போய்விடுமோ என்ற அடிவயிற்றுக் கதறலையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தன.

பாலு, படகை விட்டு வெளியே வந்து நின்று, ‘ இங்கே படகில் ஆட்கள் இருக்கிறார்கள், என்னால் வர முடியாது ’ என்பது போல் சைகை காட்டினான்.

பெருமாள் விக்கித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆனால், அந்தப் பெண் விடவில்லை. இவர்கள் பார்வையிலிருந்து மறையும் வரை அவள் படகின் திசையில் ஓடி வந்துக்கொண்டிருந்தது தெரிந்தது.

இவ்வளவு சுருக்கமான – இவ்வளவு தீவிரமான – ஒரு காதல் கதையை பெருமாள் அதுவரை கண்டதுமில்லை, கேட்டதுமில்லை.

**********************************************************************************************************************

கதையின் ஆரம்பத்தில் காவிரியை வர்ணிக்க இவ்வாறு குறிப்பிடும் சாரு,

// சுற்றிவரப் பார்த்தான். சமுத்திரத்தைப் போல் கண்காணாதவரை நிறைந்திருந்தது காவிரி. கரையே தெரியவில்லை //

“ கண்காணாதவரை “ மற்றும் ” கண்ணுக்கெட்டிய தூரம் “ எனும் இருவேறு வார்த்தை பிரயோகங்களை தேவைக்கேற்ப எவ்வாறு பயன்படுத்துகின்றார் என்பதை கதையின் இறுதியில் வரும் வாசகங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்!

// குடிசையின் வாசலில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். அக்கம்பக்கம் கண்ணுக்கெட்டிய தூரம் யாருமில்லை //

இதுதான் வார்த்தை விளையாட்டு. மேம்போக்காக வாசித்தால் இந்த ஜாலங்களை உணராமலேயே கடந்து போகக் கூடும்.


சங்கரா மீனுக்கும் ரோக் மீனுக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்குகின்றார். ட்ராட் மீன் காஷ்மீரில் தான் கிடைக்குமென தகவல் தெரிவிக்கின்றார்.
வாசிப்பினூடே ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்து செல்கின்றார்...// மரண பயம்… காம உணர்வு… திரும்பவும் Georges Bataille இன் தத்துவார்த்தப் பிரச்சனைக்கு வந்து சேர்ந்துவிட்டோம். மரணம் – காமம் – மரணம் – ஜனனம்… இது ஒரி வட்டச் சுழற்சி எனத் தோன்றியது. // என உலக இலக்கியவாதியையும், தத்துவத்தையும் அறிமுகப்படுத்துகின்றார்.

இவை தவிர, ராஸ லீலாவில் வாசகனின் சிந்தனைகளைத் தூண்டக்கூடியவை ஏராளம்...ஏராளம்!


சரி... கொஞ்சம் இமயமலைக்கு வருவோம்.



இமயமலைப் பயணத்தின் போது பெரும்பாலான புகைப்படங்கள் வேனுக்குள் அமர்ந்தவாறு போகிறப்போக்கில் எடுத்தவை!

சாரு, காவிரி நதியோர குன்றில் குறிப்பிட்ட இளம்பெண்ணைப் போல இமயமலையிலும் சில பெண்களைக் காண நேரிட்டது. ( ஆனால் தீவிரம் மிக்க காதல் கதை கிடையாது )

ரொதாங் பாஸ் -ஐ கடக்க மலையேறும்போது சாலையோரத்தில் நின்றபடி மலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண். சுற்றும் முற்றும் ஒருவருமில்லை. ஆடு மேய்ப்பவளாக இருக்கக்கூடும் என தோன்றுமளவிற்கு கண்ணுக்கு புலப்பட்ட தூரம் வரை மந்தைகளும் இல்லை!

அங்கு நின்று எதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்திருப்பாள் என்பதற்கு ஆயுள் முழுவதும் பதில் கிடைக்கப்போவதில்லை எனக்கு.


                          



அடுத்து,
ஜிஸ்பாவைக் கடந்து சார்ச்சு பயணித்த அதிகாலைப் பொழுதொன்றில்
சிறுமி ஒருத்தி தன்னந்தனியாக  “ஐந்தாங்கல் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளது ஒவ்வொரு அசைவும், தனக்குத்தானே சிரித்து/ பேசிக்கொண்ட அந்த கொள்ளை அழகும் இதுவரையிலான உலகசினிமாக்களில் பதிவு செய்யப்படாதது! அது ஒரு கவிதை! வார்த்தைகளை யோசிக்கத்தூண்டாத கவிதை!

                          


                                 
                           

பரத்பூர் எனும் தற்காலிக கிராமத்தில், தற்காலிக கூடாரமொன்றில் பயணிகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் கூடார பணிப்பெண் ஒருவரை மேலேயுள்ள படத்தில் காணலாம்!

                             
மலையுச்சி ஒன்றில் தன்னந்தனியாக அமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பெண்மணி ஒருவர்... இவர் உடன் வந்தவர்கள் ஒருவரும் கண்களுக்கு புலப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!