Oct 31, 2013

ஆரம்பம் : ஓர் திரையரங்க அலசல்

                                                                  

 

 






எனது சொந்த ஊர் திருப்பத்தூராக (வேலூர் மாவட்டம்) இருந்தாலும் சிறு வயதிலிருந்தே சென்னைக்கும் எனக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
எனது உறவினர்கள் பலரும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் குடியமர்ந்துவிட்டபடியால் ஒவ்வோர் கோடைவிடுமுறையும் சென்னையில்தான் கழியுமெனக்கு. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு விடுமுறை நாட்கள் குறைவு என்பதால் அம்மா சென்னைக்கு அழைத்து வரமாட்டார்கள்.

ஒரு மாத விடுமுறையில் பத்து முறைக்கும் மேலாக மெரினா கடற்கரைக்கு செல்வோம். அதற்கு அடுத்தபடியாக செல்வது சினிமாவுக்குதான். தவிர டிடி மெட்ரோ- 2 சானலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும், பட்டம் விடுவதும், கிரிக்கெட் விளையாடுவதும் சென்னையில் மேலும் ஈர்த்த விஷயங்களாகும்.


சென்னையைப் பொறுத்தவரை புதுப்படங்கள் நான்கு பகுதிகளில் நான்கு திரையரங்குகளில் ரிலீஸாகும்.

அதாவது, வடசென்னையில் பாரத், மகாராணி, அகஸ்தியா, எம்.எம்.தியேட்டர், பாண்டியன் போன்ற அரங்குகள்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவற்றுள் பாரத் தியேட்டரில்தான் சூப்பர் ஸ்டாரின் படங்கள் ரிலீஸாகும்.


                                                                    




மத்திய சென்னையில் ( புரசைவாக்கம் , கீழ்பாக்கம் ,அயனாவரம் ) அபிராமி காம்ப்ளக்ஸ் மற்றும் சங்கம் காம்ப்ளக்ஸ் முக்கிய அரங்குகளாகும். ரஜினி காந்தின் படங்கள் அபிராமியில் ரிலீஸாகும்.

ஈகா மற்றும் மோட்சம் காம்ப்ளக்ஸிலும்
சமயங்களில் புதுப்படங்கள் ரிலீஸாகும். ”கரகாட்டக்காரன்”  மோட்சத்திலும், “பூவே உனக்காக” அனு ஈகாவிலும் ரிலீஸானது.

ஈகா , அனு ஈகா காம்ப்ளஸில் ஒரு செண்டிமெண்ட் உண்டு. ஈகா அரங்கில் ரிலீஸாகும் தமிழ்ப் படங்கள் ஓடாது. ஹிந்திப்படங்கள் ஹிட்டடிக்கும். இதற்கு மாறாக அனுஈகா அரங்கில் ரிலீஸாகும் ஹிந்திப்படங்கள் தோல்வியைத்தழுவும். தமிழ்ப்படங்கள் வெற்றிப்பெறும்!




                                                         


                                                                             





மவுண்ட் ரோட் பகுதிகளுக்கு வந்தோமேயானால் தேவி காம்ப்ளக்ஸ் தான் மிக முக்கியமானதாகும். அடுத்தபடியாக ஆல்பட் (காம்ப்ளக்ஸ்) , சாந்தி, அலங்கார், ஆனந்த், லிட்டில் ஆனந்த், அண்ணா, உட்லண்ட்ஸ் மற்றும் உட்லண்ட்ஸ் சிம்பொனி போன்றவை  அன்றைய கால கட்டங்களில் முக்கிய அரங்குகளாக இருந்தன. அலங்கார், ஆனந்த் போன்றவை தற்போது இல்லை. சத்யம் காம்ப்ளக்ஸ் 90 -களுக்குப் பிறகே புகழ் பெற ஆரம்பித்தது. அதிலும் 2000-ற்குப் பிறகுதான் அபரிவிதமான வளர்ச்சி ஏற்பட்டது. இந்தப் பகுதியில் ரஜினிகாந்தின் படங்கள் ஆல்பட் அரங்கில் தான் ரிலீஸாகும்.

இவற்றைத்தவிர மெலோடி, ஜெயப்பிரதா போன்ற அரங்குகள் தமிழ் சினிமாக்களைப் புறக்கணித்து விட்டதால் , ஹம் ஆப்கே ஹைய்ன் க்ஹோன் , ரங்கீலா போன்ற ஹிந்திப் படங்கள் வருடங்களைக் கடந்து ஓடின. கெயிட்டி, கேஸினோ போன்ற அரங்குகளில் தெலுங்கு மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஆங்கில (மொழி அவசியமில்லாத) திரைப்படங்களும் ரிலீஸாகும்.

                                                                    








திரைத்துறையினர் வசிக்கும் வடபழனி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உதயம் காம்ப்ளக்ஸ் ( உதயம், சந்திரன், சூரியன் மற்றும் தற்போது மினி உதயம் ) முக்கிய அரங்காகும். தவிர, காசி, கமலா, ஏவிஎம் ராஜேஸ்வரி, எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் போன்றவைகளும் குறிப்படத்தகுந்த அரங்குகளாகும். மேலும் விருகம்பாக்கம் நேஷ்னல், தேவிகருமாரி காம்ப்ளக்ஸ் ( மூன்று அரங்குகள் ) , வடபழனி ராம் ( தற்போது திருமண மண்டபமாக பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்டது ) போன்றவற்றிலும் படங்கள் ரிலீஸாகும். ராம் தியேட்டரில்தான் விஜயகாந்தின் ”ஆன்ஸ்ட் ராஜ்” பார்த்தேன்.

இந்த நான்கு ஏரியாக்கள்தான் நகரின் மிக முக்கிய திரைப்பட அரங்குகள் நிறைந்த பகுதிகளாகும். ரஜினிகாந்தின் படங்கள் ஆல்பட், அபிராமி, பாரத், கமலா ( அல்லது சமயங்களில் உதயம் ) இவற்றில்தான் ரிலீஸாகும். தவிர, பெரம்பூரில் உள்ள ஸ்ரீபிருந்தா அரங்கிலும் ரஜினிகாந்தின் படங்கள் தவறாமல் ரிலீஸாகும். ஆகமொத்தம் சிட்டி ஏரியாவில் ஐந்து அரங்குகள்.



                                                                 



எனது அண்ணன்கள் ( பெரியம்மாவின் பிள்ளைகள்) சென்னை நகருக்குள் டிக்கெட் கிடைக்காவிட்டால், அம்பத்தூர் ராக்கி அல்லது முருகன் அரங்கிற்கு சென்று முழுப்படத்தையும் நின்றுக்கொண்டேப் பார்த்ததை பெருமையுடன் சொல்லிக் கேட்டிருக்கின்றேன்.

எனது உறவினர்கள் வண்ணாரப்பேட்டை, சிந்தாதரிப்பேட்டை, ஓட்டேரி, வடபழனி பகுதிகளில் வசித்து வந்ததால் அந்தந்தப் பகுதிகளின் அரங்குகள் நன்கு பரிச்சயம் எனக்கு.

சிட்டியில் திரையரங்குகளின் ஆதிக்கம் ஒரு எல்லையோடு முற்றுப்பெறுகின்றன. மவுண்ட் ரோட், அசோக் நகர் இந்த நேர்க்கோட்டிற்கு அப்பால் தெற்கில் குறிப்பிடும்படி எந்த அரங்கும் பிரபலமாகவில்லை. மக்கள் அதிகம் வசிக்கும் திருவான்மியூர், அடையாறு, பெசண்ட் நகர் பகுதிகளில் தியாகராஜா, ஜெயந்தி, கணபதிராம் போன்ற மொக்கையான அரங்குகளே இருந்தன. ஈசிஆர் சாலையில் ப்ரார்த்தனா ( ட்ரைவ் இன் ) ஆராதனா போன்றவை ஓரளவிற்கு பிரபலம். தற்சமயம் மாயாஜால் மிகவும் பிரபலம்.

கிண்டி, பல்லாவரம், சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை , தாம்பரம் போன்ற மக்கள் தொகை மிகுந்த பகுதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கூட பிரபலமான அரங்குகள் இல்லாதது சற்று ஆச்சர்யமான விஷயம்தான்
( பரங்கிமலை ஜோதி விதிவிலக்கு ) .

ஆக, சென்னை நகரைப் பொறுத்தவரை  ஒரு திரைப்படம் அதிகபட்சமாக 4 அரங்குகளில்  ரிலீஸாகும். ரஜினி காந்தின் படங்கள்  எனில் 5 அல்லது 6 அரங்குகளில் ரிலீஸாகும். இதே காலகட்டங்களில் தெலுங்கு படங்கள்
ஐதராபாத் நகரில் மட்டுமே 35 அரங்குகளில் ரிலீஸாகும் என சிலாகித்து கூறுவான் எனது தெலுங்கு நண்பன் ஒருவன்.

பெரிய பட்ஜெட் படங்கள் முதலீட்டினை குறுகிய காலத்தில் எடுக்க கூடுதல் அரங்குகளில் ரிலீஸாகும் சூழல் காலப்போக்கில் உருவானது.  ரிலீஸான இரண்டாவது நாளே  வெளிவரும் திருட்டு விசிடி-யும், ஆன்லைன் பைரஸியும்

இதற்கு முக்கிய காரணமாக அமைந்தன. அந்த வகையில் 2007-ஆம் ஆண்டு வெளியான ”சிவாஜி”  திரைப்படம் சென்னை நகரில் மட்டும் 17 அரங்குகளில் ரிலீஸானது.  பின்னர் ஐநாக்ஸ், பி.வி.ஆர், எஸ்கேப், ஏ.ஜி.எஸ் , ஃபேம் நேஷ்னல் போன்ற மல்டிப்ளக்ஸ்களின் அணிவகுப்பால் அனைத்து அரங்குகளிலும் திரைப்படம் வெளியாக வேண்டியது காலத்தின் கட்டாயமானது!

சரி... ஆரம்பத்திற்கு வருவோம்!

அஜித்திற்கு அட்டகாசமான பாக்ஸ் ஆஃபிஸ் ஓப்பனிங் இருப்பதாக பரவலான கருத்து உள்ளது. மங்காத்தாவிலும் அது நிரூபணமானது.  தீபாவளிக்கு ரிலீஸாகும் திரைப்படங்களுள்  “ஆல் இன் ஆல் அழகுராஜா”-விற்காக பெரும்பான்மையான முக்கிய அரங்குகளை கைப்பற்றியதாக சில வாரங்களுக்கு முன்பாகவே ஸ்டுடியோ கிரீனின்  விளம்பரம் மூலம் அறிய முடிந்தது.  ஆனானப்பட்ட சத்யம் காம்ப்ளக்ஸிலேயே சத்யத்தில் 2 காட்சிகள்,  சாந்தம் அரங்கில் 2 காட்சிகள் எனவும் ரிலீஸிற்கு  மூன்று வாரங்களுக்கு முன்பாகவே விளம்பரப்படுத்தினர் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தினர்.  அபிராமி காம்ப்ளக்ஸில் முக்கிய அரங்கு அபிராமி 7 ஸ்டார் தான். அதனையும் கூட ஆழகுராஜா பிடித்துவிட்டார்.

தக்க பதிலடி கொடுக்க நினைத்ததாலோ என்னவோ அக்டோபர் 31-ஆம் தேதியே ஆரம்பம் ரிலீஸாகும் என  அறிவிப்பு வெளியானது. கொஞ்சம் கொஞ்சமாக அரங்குகளை பிடிக்கத் தொடங்கியது ஆரம்பம். ரீலீஸ் நாளன்று பார்த்தால்... அம்மாடி...

மாயாஜால் காம்ப்ளக்ஸில் மொத்தமுள்ள 16  அரங்குகளிலும் சேர்த்து 91 காட்சிகள்.

சத்யம் காம்ப்ளக்ஸில் 4 அரங்குகளில் 16 காட்சிகள். ( ஆனால் அனைத்து அரங்குகளிலுமே ஆரம்பம் தான் என நண்பர் ஒருவர் தெரிவித்தார் )

எஸ்கேப்
- 4 அரங்குகள் 16 காட்சிகள்.
S2 பெரம்பூர் -
4 அரங்குகள் 16 காட்சிகள்.
S2 திருவான்மியூர் - 2 அரங்குகள் 8 காட்சிகள்.

தேவி காம்ப்ளக்ஸ் - 4 அரங்குகள் 16 காட்சிகள்.
அபிராமி -
4 அரங்குகள் 16 காட்சிகள். உதயம்   - 4 அரங்குகள் 16 காட்சிகள்.
சங்கம்   - 3 அரங்குகள் 12 காட்சிகள்.
PVR மல்டிப்ளக்ஸ் 5 அரங்குகள் 25 காட்சிகள்.
ஐநாக்ஸ் -
4 அரங்குகள் 16 காட்சிகள்.
ஃபேம் நேஷ்னல் -
4 அரங்குகள் 16 காட்சிகள்.
AGS வில்லிவாக்கம் 5 அரங்குகள் 25 காட்சிகள்.
AGS ஓ.எம்.ஆர் 4 அரங்குகள் 20 காட்சிகள்.
விருகம்பாக்கம் தேவிகருமாரி 3 அரங்குகள் 12 காட்சிகள்.

வடபழனி, அசோக் நகர் பகுதிகளில் உதயம் காம்ப்ளக்ஸ், காசி, கமலா, AVM ராஜேஸ்வரி, SSR பங்கஜம், தேவி கருமாரி காம்ப்ளக்ஸ், ஃபேம் நேஷ்னல் என மொத்த ஏரியாவும் ஆரம்பம் தான். இவற்றுள் கமலா அரங்கில் கடைசி நேர பரபரப்பில்தான் ஆரம்பத்தை இரண்டு அரங்குகளிலும் திரையிட முடிவெடுத்தனர். ( வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது )

தவிர, ஆல்பட் - பேபி ஆல்பட், உட்லண்ட்ஸ் - உட்லண்ட்ஸ் சிம்பொனி, ஸ்ரீபிருந்தா , பாரத், மகாராணி, பரங்கிமலை ஜோதி , குரோம்பேட்டை வெற்றி போன்றவற்றிலும் ஆரம்பம் ஆட்டமாட தவறவில்லை.

கோயம்பேடு ரோகினி காம்ப்ளக்ஸ், கொளத்தூர் கங்கா காம்ப்ளக்ஸ், அம்பத்தூர் ராக்கி மற்றும் முருகன் காம்ப்ளக்ஸ், பூந்தமல்லி சுந்தர் அனைத்திலுமே நான்கு அரங்குகளும் ஆரம்பம்தான்.

தமிழ்சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக இதுபோன்றதொரு நிகழ்வினைக் காண்கின்றேன் நான். மங்காத்தாவைக் காட்டிலும் நேற்றைய தினம் வசூலில் பேயாட்டம் ஆடியதாக நம்பமுடிகின்றது.

அன்றைய காலகட்டங்களில் ஒரு திரைப்படம் எப்படி இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓடும். அதன் தரத்திற்கேற்ப 50 , 100 , 150 , 175, 200, 250 , 300 நாட்களைக் கடந்தும் ஓடும். பொழுதுபோக்கு அம்சம் வேறொன்றும் இல்லாததால் திரைப்படங்கள் சர்வ சாதாரணமாக 50 அல்லது 100 நாட்களைக் கடக்கும். இனி வெள்ளிவிழாக் காணும் படங்களை கனவிலும் காண முடியாது என்றே நினைக்கின்றேன். ஊரில் உள்ள எல்லா தியேட்டரிலும் படத்தைக் காட்டி, பணத்தை அள்ளும் ட்ரெண்ட் உருவாகிவிட்டதை இனி யாராலும் தடுக்கமுடியாது போல...

ஆரம்பம் - ஒரு தோராயக் கணக்கு பார்ப்போம்.

சென்னை நகரில் மட்டும் முதல் நாள் 500 காட்சிகள் எனவும் ஓர் அரங்கிற்கு சராசரியாக 500 இருக்கைகள் எனவும் கணக்கில் கொண்டால்,

500 X 500 X 120 = 3,00,00,000 ( மூன்று கோடி ) இது தோராயக் கணக்குதான். உண்மையான கணக்கு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும். தவிர, தமிழகம் மற்றும் உலகெங்கிலும் கணக்கெடுத்தால் முதல் நாள் வசூல் இந்திப்படங்களுக்கு நிகராக இருக்குமென்பதில் துளியும் ஐயமில்லை!


எது எப்படியோ... பல ஆண்டுகள் ஒதுங்கியிருந்த தயாரிப்பாளர்  ஏ.எம்.ரத்னம் சந்தோஷமடைந்தால் சரி...

1 comment:

  1. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சந்தோஷமடைந்தால் சரி...

    அவரை விடவும் எங்க அன்பு அண்ணன் ரொம்ப சந்தோஷமடைகிறார் என்பதுதான் எங்களுக்கு முக்கியம்.

    ReplyDelete